Feb 3, 2011

கூட்டணி தொடர்பாக பா.ம.க நிலை அந்தோ பரிதாபம்!!!

"வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வுக்கு, 18 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும்' என, தி.மு.க., தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், பா.ம.க., தலைமை மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு தூது விட்டுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பா.ம.க., வரும் சட்டசபை தேர்தலிலும், அணி மாறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், மரண அடி வாங்கிய பா.ம.க., வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, கட்சியை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமைக்கு தூது விட்டு சீட் பேரம் நடத்தி வந்தது. அ.தி.மு.க.,விடம் பேச பா.ம.க., தூதராக குருவும், தி.மு.க.,விடம் பேச்சு நடத்த தலைவர் மணியும் களம் இறக்கப்பட்டனர். அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு முதல் வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதால், பா.ம.க.,வுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வில்லை. அதனால், தி.மு.க., கூட்டணிக்காக, பா.ம.க., தலைமை காய் நகர்த்தி வருகிறது. தொண்டர்கள் மத்தியில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, ஆதரவு இல்லை.

இந்நிலையில், டில்லி சென்று திரும்பிய முதல்வர் கருணாநிதி, "பா.ம.க., எங்கள் கூட்டணியில் இல்லை' என, அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இடைவெளியை சரி செய்யும் நோக்கில், மணியை தூது அனுப்பினார். மணி, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து நடத்திய பேச்சு, பா.ம.க.,வுக்கு சாதகமாக அமையவில்லை. பா.ம.க., சார்பில் கேட்கப்பட்ட, 35 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் ஆகியவற்றுக்கு, அவர்கள் சம்மதிக்கவில்லை. அத்துடன், குறிப்பிட்டு எந்த தொகுதியையும் பா.ம.க., கேட்கக் கூடாது' என, தி.மு.க., தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பா.ம.க., சம்மதிக்கவில்லை. பா.ம.க., விரும்பும் தொகுதி வேண்டும் எனில், 18 தொகுதி மட்டுமே தர முடியும் என, தி.மு.க., தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

No comments: