Jan 19, 2010

கற்புக்கரசி?? குஷ்புக்கு உச்ச நீதிமன்றம் கடும்கண்டனம்.


டெல்லி: பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். நோயோ, அநாவசியமான கர்ப்பமோ ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு முறைகள் மிக அவசியம். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று கூறியிருந்தா்.

இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குஷ்புவை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 23 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நடிகை குஷ்பு உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் வழக்குகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த எல்லா வழக்குகளையும் சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து குஷ்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், பேச்சுரிமையை பறிக்கும் வகையில் எனக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி, பெண்கள் குறித்த குஷ்புவின் கருத்துக்கள் ஏற்க முடியாதவையாக உள்ளன. அவரது கருத்துக்கள் ஜீரணிக்க முடியாதவை என்று கூறியதோடு இது குறித்து இரு வாரங்களில் விளக்கமளிக்குமாறு குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

1 comment:

இப்னு அப்துல் ரஜாக் said...

பெண்களை கொச்சைப் படுத்திய குஷ்பூவுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்