Nov 16, 2014

இன்றும் கற்கால கொத்தடிமை முறை!

நவம்பர் 16/14: நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்துவந்த 28 பேர் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் அளிப்பது என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட இவர்களுக்கு, பேசியபடி சம்பளம் வழங்கப்படவில்லை என்பதோடு, இவர்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

சத்தீஸ்கரில் இருந்து  சமீபத்தில் இந்தத் தொழிலாளர்களைப் பார்க்க வந்த அவர்களது உறவினர்கள்  இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதனையடுத்து, நேற்று சில கோழிப்பண்ணைகளில் சோதனையில்  20 பெண்கள். 8  ஆண்கள் மீட்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பண்ணைகளின் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாமக்கல், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் பெரும்பாலான பண்ணைகளில்  வடமாநில தொழிலாளர்களே பெருமளவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களுக்குச் சென்று தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் பேசி அழைத்துவரும் இடைத்தரகர்கள், தொழிலாளர்கள் தேவைப்படும் கோழிப் பண்ணைகளில் இவர்களைப் பணியமர்த்துகின்றனர். இதற்கென ஒவ்வொரு தொழிலாளரின் மாதச் சம்பளத்திலிருந்தும் தங்களுக்கென ஒரு தொகையை அவர்கள் பெறுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1600 கோழிப்பண்ணைகள் இயங்கிவருகின்றன. இங்கு சுமார் நான்கு கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
சிந்திக்கவும்: வெளிமாநில ஏழை தொழிலாளிகளை ஒப்பந்த முறையில் குறைந்த கூலிக்கு அழைத்து வந்து அவர்களை அடிமைகள் போல் நடத்தும் இந்த பண்ணை முதலாளிகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வந்தாரை வாழ வைக்கும் தமிழினத்தின் நற்பேறை கெடுக்கும் இந்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. 

No comments: