Jun 12, 2011

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி நல்லதல்ல! திருமாவளவன்!

மதுரை, ஜூன். 12 -தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நல்லதல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தலாம் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்றும், இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய அ.தி.மு.க. அரசை பாராட்டுகிறேன்.

அதேபோல கச்சத்தீவை திரும்ப பெறும் தீர்மானத்தையும் வரவேற்கிறேன். ஏழை பெண்களுக்கு 4 கிராம் தங்கம் என்ற திட்டம் நல்ல திட்டம். ஆனால் அதை தொடர்ந்து நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் அந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டுக்கு உச்சவரம்பு ரூ. 24 ஆயிரம் என்பதை ரூ. 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

தற்போது நாட்டில் ஊழல் அடியில் இருந்து நுனி வரை உள்ளது. ஆனால் அப்போதும், இப்போதும் விசாரணையில் வேறுபாடு உள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது.

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது நல்லதுதான். அப்படி இருந்தால் பாபா ராம்தேவ் தனக்கு ஆயிரத்து 13 கோடி சொத்து எப்படி வந்தது என்பதை அவர் மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும்.

காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருப்பது நல்லதல்ல என்பது எங்களின் கருத்து. இந்த கருத்தை தி.மு.க.விடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். இலங்கை தமிழர் பிரச்னை மட்டுமல்லாது சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே ஒரு கசப்பான நிலை ஏற்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் பிளாக்மெயில் செய்து 63 சீட்டுகளை பெற்றது. இதனால் 2 கட்சிகளும் தேர்தலில் இணைந்து செயல்பட முடியாத நிலை இருந்தது. இதனால் தோல்வி ஏற்பட்டது. எனவே காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி நல்லதல்ல என்று மீண்டும் வற்புறுத்துவோம்.

No comments: