Jan 27, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் இன்னும் 21 நாட்களில்: ஹாட்ரிக் சாதனையாளர்கள்!!

2008-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார் இலங்கையின் சமிந்தா வாஸ். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது வங்கதேச அணி. வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரை இலங்கையின் சமிந்தா வாஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஹன்னன் சர்க்காரை கிளீன் போல்டு ஆக்கினார். பின்னர் களமிறங்கிய முகமது அஷ்ரபுல் தான் சந்தித்த முதல் பந்திலேயே வாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வாஸின் 3-வது பந்தை எதிர்கொண்ட வங்கதேசத்தின் இசனுல் ஹக், ஜெயவர்த்தனேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க வாஸ் ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் உலக அளவில் ஹாட்ரிக் சாதனைப் படைத்த மூன்றாவது வீரர், இலங்கையின் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த ஆட்டத்தில் 9.1 ஓவர்களை வீசிய வாஸ், 25 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிரட் லீ: ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ, 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இந்த ஆட்டத்தில் 4-வது ஓவரை வீசினார் பிரட் லீ. ஓவரின் 4-வது பந்தில் ஒட்டியனோ, 5-வது பந்தில் பட்டேல், 6-வது பந்தில் ஒபுயா ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். இவர்களில் பட்டேல் தவிர மற்ற இருவரும் ஸ்டம்பை பறிகொடுத்தனர்.

லசித் மலிங்கா: 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார் இலங்கையின் லசித் மலிங்கா. இந்த சாதனையைப் படைத்த 5-வது வீரர் மலிங்கா. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது இலங்கை அணி. இந்த ஆட்டத்தில் 44-வது ஓவரை வீசிய மலிங்கா 5-வது பந்தில் போலக்கையும், 6-வது பந்தில் ஹாலையும் ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் 46-வது ஓவரை வீச வந்தார் மலிங்கா. அந்த ஓவரின் முதல் பந்திலேயே காளிஸை ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். பின்னர் வந்த நிடினியை அடுத்த பந்தில் வெளியேற்றினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் மலிங்கா. இருப்பினும் இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை தோற்றுப்போனது.

1 comment:

MANO நாஞ்சில் மனோ said...

என்ன எளவோ போங்க..................