Apr 21, 2010

சாமியார் நித்யானந்தா இமாச்சலப் பிரதேசத்தில் கைது!

இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்யானந்தா இன்று கைது செய்யப்பட்டார்.
அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவினர். அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர். கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார். அவர் மீது மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் பெங்களூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுவிட்டன.

இந்த வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார் பிடுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சில வாரங்களுக்கு முன் ரெய்ட் நடத்தி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர். இந்நிலையில் முன்ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு நீதிபதி ஹூங்குண்ட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.அதேபோல தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவும் இன்றே விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கர்நாடகத்திற்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள போலீசார் அதன் பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.இதற்கிடையே நித்யானந்தா மீது ஸ்ரீபெரும்புதூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தாக்கலாகியுள்ளது. அதில், அவரைக் கைது செய்து, வரும் மே மாதம் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments: