Mar 31, 2010

மாஸ்கோ குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில்...

மாஸ்கோவில் இரண்டு மெட்ரோ ஸ்டேஷன்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் நாற்பதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கோர நிகழ்வு ரஷ்ய ஆட்சியாளர்கள் பழைய சாடிஸ்ட்-கம்யூனிச கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர் என்பதையே நமக்கு உணர்த்துகிறது.

காகஸஸ் பிரதேசத்திலிலுள்ள கறுப்பு விதவைகள் என்ற இயக்கத்தைச் சார்ந்த இரண்டு பெண்மணிகள் தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர் என ரஷ்ய அரசு விளக்கமளிக்கிறது.

ஆனால் அரசின் விளக்கத்தை நம்புவதற்கு நடுநிலையாளர்களால் இயலாத ஒன்றாகும். கடந்த 1999 ஆம் ஆண்டில் மாஸ்கோவிலுள்ள அபார்ட்மெண்ட் பிளாக்குகளில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 293 பேர் மரணமடைந்தனர், 700க்குமேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால் இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ரஷ்ய உளவு நிறுவனமான எஃப்.எஸ்.பி என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

செச்னியாவில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவும், செச்னிய மக்களுக்கு ஆதரவான பொதுமக்களின் அபிப்ராயத்தை சீர்குலைக்கவும், தீவிர தேசியவாதிகளின் ஆதரவை உறுதிப்படுத்தவும்தான் அந்தக் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

பின்னர் விளாடிமீர் புடின் ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்தார். உலக நாடுகளின் சிறைச்சாலை என வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்நாட்டின் பல்வேறு மாநிலங்கள் சுதந்திர தேசங்களாக மாறியபொழுது, காகஸஸின் பல குடியரசுகளுக்கும் முன்பிருந்த சுய ஆட்சியும் நஷ்டமானது.

இரண்டு நூற்றாண்டுகளாக சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக போராடி வருபவர்கள்தான் செச்னிய மக்கள்.போரிஸ் எல்ட்ஸின் அதிபராக இருந்த காலக்கட்டத்தில் 1996 ஆம் ஆண்டில் செச்னியாவுக்கு சுய ஆட்சி அதிகாரமும் தொடர்ந்து சுதந்திரமும் அளிக்கத்தக்க வகையிலான ஒப்பந்தத்தில் இரு சாராரும் கையெழுத்திட்டனர். விளாடிமீர் புடீன் இவ்விவகாரத்தை கையாளத்துவங்கியதுடன் 1999 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ரத்தானது.

பின்னர் ரஷ்ய ராணுவம் செச்னியாவை ஆக்கிரமித்து கொடூரமான சித்திரவதைகளையும், தாக்குதல்களையும் கட்டவிழ்த்து விட்டது. ஒரு சுதந்திர அரசுக் கட்டமைப்பை சீரழித்தது ரஷ்யா. ரம்ஸான் கதிரோவ் என்ற போர்வெறியனின் கையில் சிக்கி சின்னாப் பின்னப்படுத்தப்பட்டது செச்னியா.

ரஷ்ய ராணுவம் நடத்தும் மனித உரிமைமீறல்களை ஆதாரப்பூர்வமாக வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய அன்னா பொலித்கோவாவ்ஸ்காயா போன்ற பத்திரிகையாளர்களும், நதாலியா இஸ்திமெரோவ போன்ற மனித உரிமைப் போராளிகளும் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

எஃப்.எஸ்.பியின் கொலையாளிகள் ரஷ்ய எல்லையையும் தாண்டிச்சென்று வளைகுடாவிலும், பிரிட்டனிலும் செச்னிய தலைவர்களையும், அரசியல் பிரதிநிதிகளையும் கொலைச் செய்வது வழக்கமானது. செச்னிய அதிபர் மஸ்கதோவை கத்தாரின் தலைநகர் தோஹாவில் வைத்துக் கொலைச் செய்தனர்.

முன்னாள் ரஷ்ய உளவுத்துறையான கெ.ஜி.பியின் அதிகாரியான விளாடிமீர் புடீன், மெத்வதேவ் என்பவரை பொம்மையாக முன்னிறுத்தி செச்னியாவை ஆட்சிபுரிந்து வருகிறார்.

தமது சொந்த கணவர், சகோதரன், பிள்ளைகள் ஆகியோரை இழந்தவர்கள்தான் கறுப்பு விதவைகள். ரஷ்யாவின் அக்கிரமங்களையும் கொடூரங்களையும் நேரில் கண்டவர்கள் இவர்கள். குண்டுவெடிப்புகளை கண்டிக்கும் பொழுது இந்தச் சூழல்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: