Jan 5, 2011

தெலுங்கானா விவகாரத்தில் முடிவு வருமா?

ஐதராபாத் : டில்லியில் இன்று, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், தனி தெலுங்கானா மாநிலம் தொடர்பாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இக்கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்துள்ளன.

ஐதராபாத் மற்றும் ஒன்பது மாவட்டங்களை இணைத்து தெலுங்கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்குரிய சாதக, பாதகங்களை ஆராயும்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் உருவாக்கப்பட்டது. ஆந்திராவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துக்களை கேட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், தனி தெலுங்கானா உருவாக்குவது குறித்த தனது அறிக்கையை, கடந்த வாரம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆந்திர சட்டசபையில் மொத்தமுள்ள 294 எம்.எல்.ஏ.க்களில் 123 பேர் கடலோர ஆந்திர மாவட்டங்களை சேர்ந்தவர்கள். 119 பேர் தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்கள். 52 பேர் ராயலசீமா பகுதியை சேர்ந்தவர்கள்.

டில்லியில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளும் படி ஆந்திர மாநிலத்தில் உள்ள எட்டு முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன் அறிவிக்கவும், விவாதிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு கட்சியும் இரண்டு பிரதிநிதிகளை இந்த கூட்டத்துக்கு அனுப்பி வைக்கும்படி கோரப்பட்டுள்ளது. தெலுங்கானாவை ஆதரிப்பவர், எதிர்ப்பவர் என்ற வகையில் காங்கிரஸ் கட்சி இரண்டு பிரதிநிதிகளை இந்த கூட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

முதல்வர் ஆலோசனை: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் டில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். தெலுங்கானா விவகாரத்தால் மாநிலத்தில் எழக்கூடிய பதட்டத்தை தணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சோனியாவிடம் தெளிவு படுத்தினார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்திலும் இவர் பங்கேற்க உள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படாவிட்டால் அப்பகுதியை சேர்ந்த எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க் களும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யபோவதாக அச்சுறுத்தியுள்ளனர். இது குறித்தும் கிரண்குமார் ரெட்டி, சோனியாவிடம் விவாதித்தார். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள், பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து பேசினர். அப்போது பிரணாப் முகர்ஜி குறிப்பிடுகையில், " சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை வழங்கப்படும். அவற்றை நன்றாக படித்து ஆலோசனை கூறுவதற்கு தேவையான அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கூற வசதியாக இரண்டு மூன்று வாரங்கள் கழித்து மற்றொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யலாம்' என்றார்.

No comments: