Dec 27, 2009

கர்கரேவின் புல்லட் புரூப்: தொடரும் குழப்பங்கள்

மும்பை:தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் உடையை நான் குப்பைத் தொட்டியி்ல் போட்டு விட்டேன் என்று முன்பு சாட்சியம் அளித்த துப்புறவுத் தொழிலாளி தற்ப்போது அதுகுறித்து தனக்குத் தெரியாது என்று பல்டி அடித்துள்ளார்.

ஹேமந்த் கர்கரேவின் புல்லட் புரூப் உடை தரக் குறைவாக இருந்ததாகவும், இதனால் அதை வாங்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந் நிலையில் அது காணாமல் போய் விட்டதாக போலீசார் கூறினர். இதையடுத்து இது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று கர்கரேவின் மனைவி கூறினார்.

இந் நிலையில் துப்பாக்கிக் குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் கர்கரேவை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் உடையை நான் தான் கழற்றினேன். ஆனால், அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன் என்று ஜே.ஜே. மருத்துவமனை துப்புறவுத் தொழிலாளி தினேஷ் கத்தார் கூறியிருந்தார்.

ஆனால், இது ஒரு செட் அப் என்றும், அந்த உடையை மறைத்துவிட்ட அதிகாரிகள் தான் இப்படி கத்தார் மூலம் பொய்யை பரப்புவதாகவும் கர்கரேவின் மனைவி கூறியிருந்தார்.

இந் நிலையில் தான் கூறியதை அவர் மறுத்துள்ளார் கத்தார். எனக்கு புல்லட் புரூப் உடை குறித்து எதுவும் தெரியாது. அந்த புல்லட் புரூப் உடையை நான் ஒரு பையில் போட்டு ஒரு வார்டில் வைத்திருந்தேன். அதற்குப் பிறகு அந்தப் பை என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். துப்புறவுத் தொழிலாளியின் இந்த பல்டியால் மேலும் குழப்பம் கூடியுள்ளது.

No comments: