Mar 7, 2017

தமிழகம் இந்தியாவின் ஒருமாநிலமா?

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லை. அதனால்தான் மத்தியில் ஆளும் மோடி அரசு அமைதி காத்து வருகிறது.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் 3 கடிதங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு எழுதினார். அந்தக் கடிதங்களுக்கு சின்ன மரியாதையாவது கொடுத்து மோடி, இலங்கை அரசை நிர்பந்தம் செய்து மீனவர்களை விடுவிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தமிழ்நாடு, குஜராத்திலோ அல்லது டெல்லியிலோ இருந்திருந்தால் பிரதமர் மோடி வாய் திறப்பார் என்று தமிழக மக்கள் சொல்வதில் தவறேதும் இல்லை. முதல்வர் எழுதிய 3 கடிதங்களின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் பிரிட்சோவின் உயிர் போயிருக்காது என்று ராமேஸ்வரம் மக்கள் கூறியுள்ளனர்.

இதுவரை சுமார் 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுகடலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் இந்த கொடூர தாக்குதல்களை சுமார் 40 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துவது மீனவர்களை வெளியே விடுவது என்பது எல்லாம் நாடகம் போலவே நடந்து வருகிறது. 

கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதியும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு பிறகு தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு சுமூக தீர்வு எட்டப்பட்டு விடும் என்று மீனவர்கள் நம்பி இருந்த வேளையில்தான், சுமார் 85 மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரமான 125 படகுகள் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் முறையற்ற போக்கே இன்று ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோவின் உயிர் நடுகடலில் பிரிய காரணமாக அமைந்துள்ளது. இதற்கு மோடி அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்றால் மோடி இது குறித்து வாய் திறக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களும் கோரியுள்ளனர். 

கொக்ககோலா, பெப்சி, ஹைட்ரோ கார்பன் திட்டம், கூடங்குளம் அணு மின்நிலையம், நியூட்ரினா திட்டம், தூத்துக்குடி ஸ்டர்லைட் நிறுவனம், போன்ற நாசகார திட்டங்கள், காவேரி, முல்லை பெரியாறு, எய்ம்ஸ் மருத்துவமனை, என்று தமிழகர்கள் வாழ்வாதார தேவைகளை புறக்கணிப்பது, இதுபோன்ற தொடர் வஞ்சக செயல்களால் தமிழகம் இந்தியாவின் ஒருமாநிலம் இல்லை என்பதை ஆளும் பாசிச bjp அரசு நிரூபித்துள்ளது.  

No comments: