Jun 12, 2011

கல்வி கொள்ளையர்களுக்கு கடிவாளமா?

JUNE 13, தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து மேல் முறையீடு செய்த 6400 பள்ளிகளுக்கான திருத்திய கட்டணம் நாளை வெளியாகிறது. புதிய கட்டணங்கள் எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்தும் கட்டணக் குழு நாளை விளக்கம் அளிக்க உள்ளது.

தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் இந்த கட்டணத்தில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று 6400 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன.  பின்னர், கட்டணக் குழுவின் தலைவராக நீதிபதி ரவிராஜபாண்டியன் பொறுப்பேற்றார். அவர் 15.11.2010 முதல் 4.5.2011 வரை பள்ளி நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார்.

நேர்காணலின் போது ஒவ்வொரு பள்ளியும் அளித்த விவரங்கள், மேல் முறையீடு செய்தபோது அளித்த விவரங்கள், நேர்முகத் தேர்வின்போது அளித்த விவரங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஆடிட்டர்களின் தணிக்கைக்கு உட்படுத்தி மீண்டும் அவற்றை கட்டணக் குழு சரிபார்த்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக இறுதி ஆணை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய கட்டணத்தை வெளியிட அரசு அனுமதி வழங்கியது.  இதையடுத்து மேல் முறையீடு செய்த மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகள் அடங்கிய 6357 பள்ளிகளுக்கு இறுதி ஆணைகள் தயார் நிலையில் உள்ளன.

இறுதி ஆணைகள் நாளை (13ம் தேதி) அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.  நாளை காலை 10.30 மணி அளவில் டிபிஐ வளாகத்தில் உள்ள கட்டணக் குழு அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இறுதி ஆணைகள் அடங்கிய கவர்களை பெற்றுக் கொள்வார்கள்.

அதன் பின் அந்தந்த மாவட்டங்கள் ஏதாவது ஒரு மையத்துக்கு அந்தந்த பள்ளிகளை வரவழைத்து இறுதி ஆணைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்குவார்கள்.  மேல் முறையீடு செய்த பள்ளிகள் நேர்காணலின்போது கொடுத்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டும், கட்டண நிர்ணய சட்டப்படியும் பள்ளிகளுக்கு ஏற்ப தற்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கு முன்பு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேல் முறையீட்டுக்கு பின்னர் தற்போது எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாளை தெரியும்.  நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு நாளை இது குறித்து விளக்கம் அளிக்க உள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அந்தந்த பள்ளிகள் கட்டணம் குறித்த விஷயங்களை பள்ளி தகவல் பலகையில் ஒட்ட வேண்டுமா, ஏற்கெனவே வசூலித்த கட்டணம் அதிகமாக இருந்தால் அதை திரும்ப மாணவர்களுக்கு கொடுக்க வேண்டுமா, இந்த கட்டணத்திலும் திருப்தி இல்லை என்றால் மீண்டும் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற சந்தேகங்களுக்கு நாளை பதில் கிடைக்கும் என்று தெரிகிறது.

No comments: