Nov 25, 2010

சினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ.

காஸா நோக்கி சென்ற நிவாரணக் கப்பலில் இஸ்ரேலிய படையினர் நிகழ்த்திய படுகொலை சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மே 31, காஸா முற்றுகைக்குள் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, "மாவி மார்மரா" என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இஸ்ரேலிய கடற்படையினர், சர்வதேச கடற்பரப்பினுள் கப்பலை வழிமறித்தனர். இஸ்ரேலியரின் திடீர் தாக்குதல் காரணமாக, 20 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் சிறைப் பிடிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களும், கப்பல் பயணிகளும் துருக்கிய பிரஜைகள் ஆவர். அதனால் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர உறவு முறிந்தது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக தாக்குதல் நடந்த போதிலும், துருக்கியினால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை.

தற்போது "Kurtlar Vadisi - Filistin" (ஓநாய்களின் பள்ளத்தாக்கு - பாலஸ்தீனம்) என்ற துருக்கி சினிமா, இஸ்ரேலுக்கு எதிரான போரை, வெள்ளித்திரையில் முன்னெடுக்கின்றது. ஒரு உண்மைச் சம்பவத்தை(மாவி மர்மரா கப்பல் படுகொலை) அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைக்கதை, அதற்கும் அப்பால் நகர்கின்றது. சினிமா ஹீரோ (துருக்கி ஜேம்ஸ் பான்ட்) படுகொலைக்கு காரணமான இஸ்ரேலிய படையினரை தேடித் தேடி அழிக்கிறார். இது ஒரு கற்பனைக் கதையாக இருந்த போதிலும், கொடுமைக்கார வில்லன்களாக இஸ்ரேலிய படையினர் சித்தரிக்கப் பட்டுள்ளனர். அரேபியர்களை வில்லன்களாக சித்தரித்து தான் ஹாலிவூட் சினிமாக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், சினிமாவில் இஸ்ரேலியர்கள் வில்லன்களாக காட்டப்படுவதை இஸ்ரேலால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஜனவரியில் உலகெங்கும் திரையிடப்படவிருக்கும் "குர்த்ளர் வாடிசி" சினிமாவை தடை செய்யுமாறு, இராஜதந்திர அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

நன்றி செய்திகள்: கலையகம்.

2 comments:

அதிரை தும்பி said...

அதி மேதாவிகள் என்ற நினைப்பில் கட்டுரைகள்.அத்தனியும் அசிங்கம்.கேவலம்.செக்ஸ் கட்டுரைகளை நீக்கு,இல்லாங்காட்டி பிளாக்கை மூடு

PUTHIYATHENRAL said...

அன்புள்ள சகோதரருக்கு நாங்கள் ஒன்றும் அதிமேதாவிகள் என்று உங்களிடம் ஒருநாளும் சொல்லியது இல்லை. நீங்கள் பொத்தம் பொதுவா கட்டுரைகள் எல்லாம் அசிங்கம், கேவலம், செக்ஸ் என்று சொல்லிவிட்டீர்கள். எந்த கட்டுரை அசிங்கம் என்று நீங்கள் நினைகிறீர்களோ அதற்க்கு விமர்சனம் எழுதுங்கள். நீங்கள் விமர்சனம் எழுதிய கட்டுரையில் நீங்கள் சொல்லுவது போல் எதுவும் இல்லை. அடுத்து தவர்களை ஒருமையில் அழைக்கும் அதிகாரத்தை யாரும் உங்களுக்கு கொடுக்கவில்லை. அது போல் உங்களுக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கு தாராளமாக சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களுக்கு முடிந்த வரை பதில் அளிக்கப்படும். நீங்கள் ப்ளோக்கை மூட சொல்லும் அளவுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. கருத்து எழுதியமைக்கு நன்றி.