May 31, 2010

அமெரிக்கக் கண்டத்தின் 3 நாடுகளில் 'அகதா' புயல் : 93 பேர் பலி.

அமெரிக்கக் கண்டத்தின் பசிபிக் கடல் பிராந்தியத்திலுள்ள கௌதமாலா நாட்டில், மெக்சிகோ எல்லையில் புயல் தாக்கியது. இதற்கு அகதா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புயல் காரணமாக கௌதமாலாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கடுமையாக மழை பெய்தது. இதனால் சுமார் 3 அடி உயரத்துக்கு வீதிகளில் வெள்ளம் கரை புரண்டோடியது.

தலைநகர் கௌதமாலா அருகேயுள்ள சான்அன்டோனியோ பலோபோ நகரில் கடு மையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மரங்கள், மின்கம்பங்கள் வீதிகள் போன்றவையும் மண்ணுக்குள் மறைந்தன. கோப்பித் தோட்டங்கள் பூமிக்குள் புதைந்து நாசமானது. மேலும் ஸ்வல்லன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கரை உடைந்தது. இதையடுத்து வெள்ளம் கிராமங்களில் புகுந்தது.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். 70 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மீட்பு நடவடிக்கைகள் தீவிர மாக நடை பெறுகிறது என கௌதமாலா அதிபர் அல்லாரோ கோலாம் தெரிவித்துள்ளார். கௌதமாலாவைத் தாக்கிய அகதா புயல் பக்கத்து நாடுகளான எல்சால்வேடர், ஹோண்டுரா ஆகிய நாடுகளையும் தாக்கியது. பலத்த மழை பெய்ததால் அங்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டன.

எல்சால்வேடரில் 140 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பலியானார்கள் இந்தத் தகவலை அந்நாட்டு அதிபர் மாருரிசியோபியூன்ஸ் தெரிவித்தார். ஹோண்டு ராவில் ஏற்பட்ட புயல் மழைக்கு சாந்தா அனா நகரில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி ஒருவர் இறந்தார். இந்த 3 நாடுகளிலும் புயல் தாக்கியதில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: