Feb 5, 2010

தீவிரவாத சிவசேனா மற்றும் அதன் பத்திரிக்கை சாம்னா ஆகியவற்றிக்கு தடை வருமா?


மும்பை: வட இந்தியர்கள், மும்பை விவகாரம் தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் பால் தாக்கரே தொடர்ந்து எழுதி வரும் தலையங்கங்கள், அக்கட்சித் தலைவர்களின் கட்டுரைகள் குறித்து விரிவாக ஆராய மாநில அரசின் சட்டத்துறைக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கூறுகையில், சாம்னாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்குமாறு சட்டத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் இந்த ஆய்வை முடித்து அறிக்கை தருமாறும் அது கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

சாம்னா மீது ஐபிசி 153ன் கீழ் (மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பது, துவேஷத்தைத் தூண்டுவது) நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் சாம்னா மீது தடையும் வரக் கூடும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறுகையில், சிவசேனா பத்திரிக்கை மற்றும் அதன் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சாம்னாவில் எழுதப்பட்டு வரும் கட்டுரைகள் உள்ளிட்டவை குறித்து சட்டரீதியான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் மூத்த தலைவரும், சாம்னா எடிட்டருமான சஞ்சய் ராத்தின் அறிக்கைகள் மிக உன்னிப்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து எல்லை மீறி அவர்கள் நடந்து வந்தால் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றார்.

ஆனால் அரசின் இந்த நடவடிக்கையை சஞ்சய் ராத் நிராகரித்துள்ளார். கட்சியின் உணர்வை எந்த சென்சாராலும் தடை செய்ய முடியாது, உடைக்க முடியாது, அணைக்க முடியாது.

பால கங்காதர திலகர் காலத்திலிருந்தே இதுபோன்ற தடையை மேற்கொள்ள முயற்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் நாங்கள் பணிந்து போக மாட்டோம் என்றார்.

சாம்னா நீண்ட காலமாகவே இதுபோன்ற கட்டுரைகளை எழுதிக் கொண்டுதான் உள்ளது. ஆனால் மகாராஷ்டிரத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி இவ்வளவு நாள் வரை கண்டு கொள்ளாமல்தான் இருந்தது.

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் குறித்து சாம்னாவில் பால் தாக்கரே கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க ஆரம்பித்தவுடன்தான் காங்கிரஸ் கூட்டணி அரசு விழித்தெழுந்து ஆக்ஷனில் குதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: