Oct 3, 2009

இஸ்ரேலின் வெறியாட்டம் - பலியாகும் குழந்தைகள்

இஸ்ரேல் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இஸ்ரேல் பாலஸ்தீன போராட்டம்தான். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்த கொடூர போராட்டம் ஜான் ஏறி முழம் சறுக்கிய கதையாக முடிவுக்கு வராமல் நடந்து கொண்டிருக்கிறது.

விடுதலைக் கேட்டு போராடும் பாலஸ்தீன மக்கள் தலைவர்கள் உலக நாடுகளில் பலமிக்க பல ஐரோப்பிய நாடுகளிடமும் மற்றும் அமேரிக்காவிடமும் பிச்சைக் கேட்டு இதுவரை உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் பாலஸ்தீனர்களின் ஆயுதப் போராட்டம் அவ்வப்போது தலை தூக்குவதும் பிறகு குறைவதுமாக முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போராட்டத்தில் அதிகமாக பலியாவது பெண்களும் குழந்தைகளுமே! யுனிசெப்பின் கணக்கெடுப்பின்படி கடந்து ஐந்து வருடங்களில் 542 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலின் துப்பக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர்.

சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பாக முஹம்மது அல் துர்ரா எனும் 12 வயது சிறுவன் தன் தந்தையின் கைகளிலேயே, இஸ்ரேலிய ராணுவத்தால் சுடப்பட்டு மரணமடைந்தான்.

இச்செய்தி தவறானது என்று இங்கு ஒரு பதிவில் சமீபத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. ஒரு வேளை இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு வலையுலகில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் செய்தியேல்லாம் ஆதாரம் நிறைந்ததாகத் தோன்றலாம்.

உலகமே இச்சிறுவனின் கொடுமையான மரணத்தை டிவியில் பார்த்தது. அச்சிறுவனின் தந்தை தனது மகனைக் காப்பாற்ற ஒரு சுவற்றின் அருகிலும் ஒரு மெட்டல் பேரலுக்கு (Metal Barrel) மத்தியில் தானும், தனது மகனும் பயந்து மறைந்து நின்றனர். என்னதான் போராடியும் முடியாது தன் மடியிலேயே தனது மகனை இஸ்ரேலிய ராணுவத்தின் இரு தீவிரவாதிகளின் துப்பக்கி குண்டுகளுக்கு பலியாகக் கொடுத்தான் அந்த தகப்பன்.

அச்சிறுவன் தன் தந்தையின் மார்பைக் கட்டிபிடித்து பயந்து அழுவதும், தந்தை இரு கைகளாலும் அவனை மறைகக முயல்வதும், துப்பாக்கிக் குண்டுகள் அவர்கள் இருவரின் பின்னால் உள்ள சுவற்றை துளைப்பதும், பிறகு இறுதியாக அச்சிறுவனின் உடலைத் துளைப்பதுமாக அந்த வீடியோ படம் காட்டுகிறது. மகன் தன் மடியில் செத்துக் கிடப்பதைப் பார்த்த தந்தை வலிப்பு வந்து மயக்கமடைகிறான்.

இந்தக் கொடுமையான காட்சியைப் படமாக்கியது பிரான்ஸ் 2 டிவிக்காக பணிபுரியும் தலால் அபு ரஹ்மா எனும் பாலஸ்தீன கேமராமேன். இந்தப் படம் இஸ்ரேலின் கொடுமையை சித்தரிக்கும் ஒரு ஐகோனாக (icon) பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் மறையாமல் இருக்கிறது.

இந்நிகழ்ச்சியை பின்னனியாக வைத்து நூற்றுக் கணக்கான சோகக் கவிதைகள் உலகம் முழுவதும் எழுதப்பட்டன. எகிப்து, துனீசியா மற்றும் பெல்ஜியம் நாடுகள் முஹம்மது அல் துர்ராவின் புகைப்படம் தாங்கிய ஸ்டாம்புகளை வெளியிட்டன. அரபு நாடுகளில் உள்ள பலத் தெருக்களுக்கும் கார்டன்களுக்கும் இச்சிறுவனின் பெயர் சூட்டப்பட்டது.

கெய்ரோ நகரில் இஸ்ரேலின் தூதரகம் இருக்கும் தெருவிற்கு எகிப்திய அரசு இச்சிறுவனின் பெயரை வைத்திருக்கிறது.

No comments: