Jul 13, 2011

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா; வீடியோ உண்மையே!

ஜூலை 14 ,பெங்களூர்: பெங்களூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், நித்யானந்தா, ரஞ்சிதாவுடன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டி அளித்தது கர்நாடக போலீசில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘

கோர்ட்டில் எல்லா விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன; நித்யானந்தா, ரஞ்சிதாவுடன் இருந்த வீடியோ உண்மை தான்’ என்று போலீஸ் மீண்டும் உறுதி கூறியுள்ளது. சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் சென்னை போலீசில் கொடுத்துள்ள புகாரில், தாங்கள் நெருக்கமாக இருப்பது போல் கடந்தாண்டு வெளியான சி.டி. காட்சிகள் போலியானவை என்று கூறியுள்ளனர்.

கடந்தாண்டு சம்பவத்தை சுட்டிக்காட்டி, அவர்கள் பேட்டியும் அளித்தனர். இருவருமே, பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினர். நேற்று முன்தினம், ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக்கொண்டு வெளியேறி விட்டார். நேற்று நித்யானந்தா பேட்டியின் போது, பதில் சொல்ல முடியாமல் திணறி, நிருபர்களையே திட்டித்தீர்த்தார். பல கட்டங்களில் அவருக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

நானும் ரஞ்சிதாவும் ஒன்றாக இருந்ததாக எடுக்கப்பட்ட வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது; வீடியோவில் உள்ளது பெங்களூரில் என் ஆசிரமத்தில் உள்ள அறை அல்ல’ என்றெல்லாம் முன்னுக்கு பின் முரணாக பேசினார் நித்யானந்தா. சென்னையில் அவர் பேட்டியளித்த நிலையில், அது பற்றி கர்நாடக போலீஸ் அதிர்ச்சி அடைந்தது. ‘வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, பேட்டி அளிப்பதே தவறு; போதாக்குறைக்கு கோர்ட்டில் வழக்கு பட்டியலில் இல்லாதவர்கள் பற்றி குற்றம் சுமத்தி பேசுவது எப்படி’ என்று வினவினர்.

நித்யானந்தா வழக்கை விசாரித்து வரும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் இது பற்றி நேற்று கூறுகையில், ‘நித்யானந்தா, ரஞ்சிதா வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விசாரணையில் உள்ள ஒரு வழக்கு பற்றி மற்றொரு மாநிலத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கோரி, அவர்கள் புகார் கொடுத்து இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல். நித்யானந்தா & ரஞ்சிதா நெருக்கமாக இருக்கும் சி.டி.யை டெல்லி, ஐதராபாத்தில் உள்ள ஆய்வு மையங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்தோம்.

அந்த சி.டி.யில் பதிவாகி இருந்த வீடியோ காட்சி உண்மைதான் என்று சான்றிதழ் பெற்றுள்ளோம். அது நீதிமன்றத்திலும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நித்யானந்தா & ரஞ்சிதாவின் நடவடிக்கை வழக்கை திசை திருப்பும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் உள்ளது’ ஜாமீனில் இருக்கும் போது வெளியூரில் அது குறித்து பேட்டி அளிப்பதும் தவறு என்றனர்.

கேர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில், லெனின் உட்பட மூன்று பேர் தான் உள்ளனர். அப்படியிருக்கும் போது, கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத வேறு சிலர் பெயர்களை சொல்லி, அவர்களை களங்கப்படுத்தும் வகையில் சென்னையில் பேட்டி அளித்தது சட்ட வரையறையை மீறியது மட்டுமல்ல; கோர்ட் அவமதிப்பும் கூட. மேலும் சன் குழுமத்தை திட்டமிட்டு, களங்கப்படுத்தும் வகையில், யாரோ சிலர் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட சதியாகவே கருத இடமிருக்கிறது’ என்றும் சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments: