Jun 12, 2011

ஈழத்தமிழர் விசயத்திலே நாடகமாடும் இந்தியா!!

கொழும்பு, ஜூன் 13: இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக இந்தியா தெரிவித்த யோசனைகளை இலங்கை நிராகரித்துவிட்டது.

என அந்நாட்டிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.  நிலம் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

இதனிடையே, இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பணியை நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பது என அதிபர் ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு அதிபர் ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்துப் பேசியது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு காணுமாறு இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்திய-இலங்கை அமைதி உடன்பாட்டின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்காக 1987-ம் ஆண்டே 13-வது அரசியல் சாசன சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி ஈழத் தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது என்று சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன் கூறினார்.

ஆனால், இந்தியக் குழுவினர் சனிக்கிழமை மாலை இந்தியா திரும்பிய பிறகு இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கியமான அரசியல் அதிகாரங்கள், வசிப்பிடங்கள் மீதான அதிகாரம் ஆகியவற்றை மாகாண அரசுகளுக்கு விட்டுத் தர முடியாது என்று இந்தியக் குழுவினரிடம், இலங்கை தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

காவல்துறை மற்றும் நிலம் மீதான அதிகாரத்தை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது, இந்தியா அளித்த யோசனைக்கு எதிராக அமைந்துள்ளது. இது இரு நாட்டு அரசியல் தலைமைக்கு இடையே நெருடலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ""சண்டே டைம்ஸ்'' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிந்திக்கவும்: ஈழத்தமிழர் விசயத்திலே இந்தியா நாடகம் ஆடுகிறது. ஈழத்தமிழர்கள் போராட்டத்தை அழிக்க ஆயுதம் கொடுத்து உதவியதே இவர்கள்தான், அப்படி இருக்க இப்பொது குழு அனுப்புகிறோம், பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று சொல்வது எல்லாம் வெறும் மாய்மாலம்.

அதுபோல் தமிழக மீனவர்கள் விசயத்தில் இந்தியா ஆடிய நாடகம் ஊர் அறிந்ததே. உலகில் எந்த ஒரு நாடும் தன்நாட்டு குடிமக்களை அன்னியநாடு தாக்கும் போது வேடிக்கை பார்த்ததில்லை. இந்திய வல்லரசு என்கிற புல்லரசுதான் இது போன்ற ஒரு கேவலமான விஷயத்தை செய்தது.

தற்போது உலக அளவில் ஈழத்து இனப்படுகொலை பேசப்படுகிறது இதன் முனை மழுக்கும் காரியத்தையே இப்போது இந்தியா செய்து வருகிறது. இதை கண்டு தமிழர்கள் ஏமாந்து விடவேண்டாம்.

இந்தியாவின் சுயரூபத்தை அருந்ததிராய் அழகாக சொன்னார். இவர்கள் சொந்த நாட்டு பழங்குடி மக்களின் உரிமைகளை பறிக்க, அவர்கள் வாழும் பகுதியை அந்நியநாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்த்து கொடுக்க காட்டுவேட்டை ஆடிவருகிறார்கள். இவர்கள் எப்படி ஈழத்தமிழர் நலன் காக்கப்போகிறார்கள். இவர்களை நம்பி தமிழர்கள் ஏமாந்தது போதும்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

No comments: