Jun 14, 2011

திமுகவுடன் உறவை முறித்தால் காங்கிரஸுடன் கூட்டணி!

புதுதில்லி, ஜூன். 14, திமுகவுடனான உறவை முறித்துவிட்டு அணுகினால் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிப்போம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சூசகமாகத் தெரிவித்தார்.

முதல்வராகப் பதவியேற்ற பின்னர், தில்லி வந்த முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், திமுக, காங்கிரஸ் கூட்டணி இன்னும் நீடிப்பதாலும், மத்தியில் அதிகாரத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளதாலும், சோனியாவை சந்திப்பது பொருத்தமாக இருக்காது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

பலவீனம் என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதற்கு தயங்குகிறீர்களா என அவரிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர், யாராவது என்னுடைய ஆதரவை விரும்பினால் அவர்கள்தான் என்னிடம் கேட்க வேண்டும். நீங்கள் அவர்கள் சார்பாகக் கேட்கக்கூடாது என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதற்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே கூட்டணி ஏற்படலாம் என பல்வேறு யூகங்கள் எழுந்தன. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

No comments: