Feb 7, 2011

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்!!!

சென்னை, பிப். 7: நாடு முழுவதும் 2011-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும். இதற்காக ரூ. 4 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முழுமையான கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே விவரங்களை சேகரிக்க முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் பெரும்பாலும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 1.5 லட்சம் பேர் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கணக்கெடுப்பாளரும் 150 முதல் 200 வீடுகள் வரை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சென்னையில் மட்டும் 9,000 பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தனிநபர் விவரங்கள், திருமண நிலை, பண்பாடு, கல்வியறிவு, பொருளாதாரம், இடம் பெயர்ந்து வசிப்பது குறித்த விவரம், பணி, குழந்தை பிறப்பு உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படும். தனிநபர் விவரங்கள் குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி மிகவும் ரகசியமாக வைக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை தந்த தனிநபரே கோரினாலும் அந்தத் தகவல்கள் தரப்படாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரினாலும் இந்தத் தகவல்கள் அளிக்கப்படமாட்டாது. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி முடிந்த பின் பொதுவான விவரங்களை இணையதளத்தில் எளிதில் பெறலாம். இந்தக் கணக்கெடுப்பில் புதிய அம்சங்களாக பாலினம், பிரிந்து வாழும், விவாகரத்து ஆனவர்கள், பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தைகள் நிலை, பொருள் ஈட்டாத நடவடிக்கை ஆகியவை குறித்து தனி குறியீடுகள் தரப்பட்டுள்ளன.

No comments: