![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkZMXVuRFnhVzOgpOFLu3-4-etZeT0M0fKiqZ0oQsilGnLAa0Yq4g_1up3BtAirWC6JObz_mlsdNkYe9Jgd2PwH0TLMa_P5JvA6tBaC-r1CB1ChPRNM5iLB6M8d42rGoJ0K1HUddzCS9M/s320/tamilnadu-police.jpg)
ஜனநாயக நாடுகள் மிகவும் அபூர்வமாகவே தங்களது குடிமகன்கள் மீது தேசத்துரோக வழக்கை சுமத்தும். தேசத்துரோகம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ஒருவேளை வரைவிலக்கணம் இல்லாததன் காரணமாகயிருக்கலாம். ஆனால், ஹிந்துத்துவாவின் நிர்பந்தத்தின் காரணமாக இந்தியாவின் ஜனநாயகம் சர்வாதிகாரமாக மாறிவருகிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் சுவரொட்டியை ஒட்டுவதுகூட தேசத்துரோக வழக்காக சில இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் பிரபல மருத்துவரும், மனித உரிமை ஆர்வலருமான பினாயக்சென்னின் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டு ஆயுள் தண்டனையை விதித்தது செசன்ஸ் நீதிமன்றம். இதற்குமுன் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் மற்றும் கஷ்மீர் தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவுச்செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் வழக்குப் பதிவுச் செய்தால் ஏற்படும் பின்விளைவுகளைக் குறித்து பயந்த மத்திய உள்துறை அமைச்சகம் தொடர் நடவடிக்கைகளை கைவிட்டது. பா.ஜ.கவைச் சார்ந்த ஒருவர் தாக்கல் செய்த புகார் மனுவின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப் பதிவுச்செய்ய டெல்லியில் ஒரு கீழ் நீதிமன்றம் உத்தரவிட்ட பொழுதிலும் இரண்டுபேரும் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளை நிகழ்த்தவில்லை என போலீஸ் அறிக்கையை சமர்ப்பித்தது.
கேரள மாநிலம் களமசேரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பஸ் எரிப்பு வழக்கின் பெயரால் பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல்நாஸர் மனைவி சூஃபியா மதனி மீது தேசத்துரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பதிவுச் செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குதான் நகைப்பிற்கிடமானது. கர்நாடகா மாநிலத்தில் செயல்படும் பி.யு.சி.எல் என்ற மனித உரிமை அமைப்பு வெளியிடும் செய்திப் பத்திரிகையில் ஏராளமான தேசத்துரோகச் செய்திகள் அடங்கியுள்ளன எனக் குற்றஞ்சாட்டி விஜயநகர போலீசார் அப்பத்திரிகையை வெளியீட்டாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அப்பத்திரிகை கடந்த 2007 ஆம் ஆண்டே வெளியீட்டை நிறுத்தியிருந்தது. அதனைவிட கேலிக்கூத்தான சம்பவம் தமிழகத்தின் சேலத்தில் நடந்தேறியது. ஆதிவாசிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து விரட்டியடிப்பதைக் கண்டித்து வெளியிட்ட மடக்கோலையை குடியரசுதினத்தில் விநியோகம் செய்தது தேசத்துரோக வழக்காக பதிவுச் செய்யப்பட்டது. இப்படி தேசதுரோகம் என்றபெயரில் கட்டவிழ்த்து விடப்படும் அரசுபயங்கரவாதம் எண்ணில் அடங்காதது.
No comments:
Post a Comment