Jan 23, 2011

ரூ.2000 கோடி இழப்பு! பாசிச பா.ஜ.கவின் ஆட்சியில் மக்கள் படும் அவஸ்தை!!

பெங்களூர், ஜன. 23 : கர்நாடகத்தில் நேற்று வன்முறையுடன் கூடிய பாஜக பந்த்தால் ரூ.2000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கர்நாடக தொழில் வர்த்தக சபைத் தலைவர் என்.எஸ்.சீனிவாசமூர்த்தி கூறியுள்ளார். கர்நாடகத்தில் நேற்று பாஜகவினர் நடத்திய பெரும் வன்முறை போர்க்களமாக மாறியது. அரசுப் பேருந்துகள் உள்ளிட்டவை தீவைத்து எரிக்கப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்கள் கூட ஓடவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் கூத்தால்,மக்களுக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்புடன், ரூ.2000 கோடி அளவுக்கு இழப்பையும் சந்தித்துள்ளது கர்நாடகா.

பெங்களூரில் தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆங்காங்கு பஸ் எரிப்பு, கல்வீச்சு உள்ளிட்டவையும் நடந்தேறின. மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டதாக 501 பேரை போலீஸார் கைது செய்தனர். பெங்களூரில் பனசங்கரி பகுதியில் 30 பேர், கே.ஆர்புரத்தில் 32 பேர் கைதாகினர். வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு வரை போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பந்த் போராட்டத்திற்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்ற போதிலும், கடைகள் முன்னெச்சரிக்கையாக அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரெஸ்டாரென்டுகள், போக்குவரத்து நிறுவனங்கள், டாக்சி, ஆட்டோ, சில்லறைக் கடைகளில் விற்பனை கடும் பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை.

இந்தப் போராட்டம் குறித்து கர்நாடக வர்த்தக சபை தலைவர் சீனிவாசமூர்த்தி கூறுகையில், இந்த பந்த்தால் பெரும் பாதிப்பை சந்தித்தவர்கள் அழுகும் பொருட்களை விற்பவர்கள்தான். அனைத்து காய்கறி சந்தைகளிலும் வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. இந்த பந்த்தால் மொத்தமாக ரூ.2000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக கருதுகிறோம் என்றார். யஷ்வந்த்பூரில் உள்ள மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. இருப்பினும் சிலர் பாதிக் கதவுகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்தனர். ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை. மக்கள் யாரும் வராததால் 16,000 மூடை வெங்காயம், 12,000 மூடை உருளைகிழங்கு ஆகியவை பாதி விலைக்கு விற்கும் அவலத்திற்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர். பஸ்கள், ஆட்டோக்கள் என எதுவுமே இல்லாததால் மக்கள் யாரும் வராத நிலை ஏற்பட்டு, தங்களது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

No comments: