Dec 15, 2010

அசாஞ்சே ஜாமீன் கிடைத்தும் விடுதலை இல்லை

லண்டன் : விக்கி லீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட பின்னும் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்படவில்லை.

ஸ்வீடன் அரசு தரப்பில் அவரது ஜாமீனை எதிர்த்து பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் லண்டன் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை.

முன்னதாக பிறநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் தலைமைக்கு அனுப்பிய பல ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளிப்படுத்தி அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டினார் அசாஞ்சே.

இந்தநிலையில் ஸ்வீடனில் இருந்தபோது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதான வழக்கில் லண்டனில் கடந்த சில நாள்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார். பிரிட்டிஷ் நீதிமன்றம், சில நிபந்தனைகளின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருந்த போதிலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் அசாஞ்சேவை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் நாட்டைச் சேர்ந்தவர், அமெரிக்காவின் முகத்திரையை கிழித்துள்ளார். அவருக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

No comments: