Dec 17, 2010

இந்து தீவிரவாத குழுக்களே மிகப்பெரும் அச்சுறுத்தல்: ராகுல் காந்தி

புதுதில்லி : லஷ்கர்- இ- தோய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2009 ஜூலையில் நடந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தோய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு ராகுல் காந்தி, இந்திய முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்கர்-இ-தோய்பாவை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்லீம் சமுதாயத்தினருடன் மோதலையும், பதற்றத்தையும் உருவாக்கும் இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சி இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என ராகுல் காந்தி எச்சரித்ததாக அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராகுல் குறித்த விக்கிலீக்ஸ் வெளியீட்டில் சதிச்செயல் இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து உண்மையை ஆராய்வோம். இதன் பின்னணியில் சில சதிச்செயல்கள் இருக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்.

No comments: