Nov 24, 2010

பா.ஜ.க வின் இரட்டைவேடம் - காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு - கூடுதல் ஆதாரங்களை வெளியிட்டது மதசார்பற்ற ஜனதாதளம்.

ஊழல் விவகாரங்களில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.கவின் நிலைப்பாட்டை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.நில ஊழல் புகாருக்கு உள்ளான கர்நாடக பா.ஜ.க முதல்வர் எடியூரப்பாவை தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்கச் செய்யும் பா.ஜ.க வின் நிலைப்பாட்டை இவ்விருகட்சிகளும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளன.

ஊழல் புகாருக்கு உள்ளான எடியூரப்பாவின் ராஜினாமா விவகாரத்தில் மெளனம் சாதிக்கும் பா.ஜ.க தலைவர்கள் இரட்டைவேடம் போடுவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசை எதிர்க்கும் வேளையில் பா.ஜ.க வின் இரட்டைவேடம் போடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பிருந்தா காரட் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் நில ஊழல் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட்ட கர்நாடக அரசின் நடவடிக்கை எடியூரப்பாவை காப்பாற்றுவதற்கான தந்திரம் என மதசார்பற்ற ஜனதாதளம் குற்றஞ்சாட்டியுள்ளது. நீதிவிசாரணையை புறக்கணிப்பதாக மதசார்பற்ற ஜனதாதள தலைவர்கள் தெரிவித்துள்ளனர். லோகாயுக்தா மூலம் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என மதசார்பற்ற ஜனதாதளம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை கர்நாடக அரசு நில ஊழல் குறித்த நீதிவிசாரணைக்கு உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி பத்மராஜை நியமித்தது. இதற்கிடையே அரசு நிலத்தை உறவினர்களுக்கு எடியூரப்பா வழங்கியதற்கான கூடுதல் ஆவணங்களை மதசார்பற்ற ஜனதாதளம் வெளியிட்டது. எடியூரப்பாவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு அரசு நிலத்தை சட்டவிரோதமாக விற்றது உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் இதில் அடங்கும்.

நன்றி : தேஜஸ்.

No comments: