Nov 19, 2010

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் அவசரம் கூடாது: ரஷியா.

மாஸ்கோ, நவ. 19: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் அவசரம் காட்டினால் அதை எதிர்ப்போம் என்று ரஷியா அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியா, ஜப்பானுக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்காவின் ஆதரவு உண்டு என்று தெரிவித்தார்.

இது குறித்து மாஸ்கோவில் கருத்துத் தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலெக்சி சாஸ்நோவ், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் அவசரம் காட்டக் கூடாது. இதில் அனைத்து நாடுகளும் நன்கு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நாட்டைச் சேர்ப்பது தொடர்பான முடிவை எடுக்க ஐ.நா. பொது அவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இது தொடர்பான நடைமுறைகள் பல ஆண்டுகள் நீடிக்கும்.

இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற ரஷியா ஆதரவு அளிக்கிறது என்றார் அவர். முன்னதாக ரஷிய பிரதமர் விளாதிமிர் புதின், அதிபர் திமித்ரி மெத்வதேவ் ஆகியோர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற இந்தியா தகுதியுள்ள நாடு என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: