Jan 24, 2010

சினிமாவே அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை காரணம் : மதுரை ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு அறிக்கை.


மதுரை : ” சினிமாவே அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணமாக இருப்பதாக மதுரை ஐகோர்ட் நீதிபதி வி.தனபாலன் வேதனை தெரிவித்தார். முசிறியில் ஒரு மாணவர் அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். தீபாவளியன்று பள்ளி வளாகத்தில் நண்பருடன் மது அருந்தியதாக, அம்மாணவரை வகுப்பில் அனுமதிக்க தலைமையாசிரியர் மறுத்து விட்டார். இதை எதிர்த்து அம்மாணவரின் தந்தை ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்தார். தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி,""மாணவர் செய்த தவறை இன்னும் உணர்ந்ததாக இல்லை. அவருடைய எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் இன்னும் அவரை பள்ளியை விட்டு நீக்கவில்லை,'' என்றார். இவ்வழக்கு நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி கூறியதாவது: மாணவன் பிளஸ் 1 வரை நல்ல முறையில் படித்துள்ளார். அவரது வருகை பதிவேடும் நன்றாக உள்ளது. தற்போது இத்தகைய குற்றங்களுக்கு காரணம் அவருடைய வயது. இதற்கு முழு காரணம் சினிமா தான். சமூகத்தில் சில நல்ல சினிமாக்களும் வருகின்றன. நிறைய சினிமாக்களில் உள்ள கதாநாயகர்கள் போல் தங்களை பாவித்து இளைஞர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா ஒழிந்தால் இத்தகைய பிரச்னைகள் ஒழிந்து விடும். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா. இது என் தனிப்பட்ட கருத்து. பழைய சினிமா பாடல்களை குழந்தைகள் கூட அமைதியாக கேட்டு ரசிக்கின்றனர். இன்றைய சில சினிமா பாடல்களை கேட்டு அலறி அடித்து ஓடுகின்றனர். இதை என் வீட்டிலேயே பார்க்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளாக சினிமாவில் இந்த கேடுகெட்ட நிலை நிலவுகிறது என்று கூறினார்.

No comments: