Mar 5, 2011

கற்றவர்கள் நிரப்ப வேண்டும் இல்லையேல் கயவர்கள் நிரப்புவார்கள்!!

அநீதிக்கு எதிராக அனல் வார்த்தைகள் பேசும் சீமானின் பேச்சு, சுய மரியாதையின் அடையாளம். ஈழத்தின் இன அழிப்புக்கு எதிராக உலகெங்கும் ஒலிக்கும் குரல். சிவகங்கை பக்கத்துக் கிராமத்தில் பிறந்த சீமான், நவீன தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்தது எப்படி?

சிவகங்கை அருகில் அரணையூர் என் கிராமம். வானம் பார்த்த பூமியில் மிளகாயும் நெல்லும் பயிரிட்டு வாழும் எளிய வெள்ளாமைக் குடிகள் நாங்கள். எல்லாவிதச் சாதிய அடக்கு முறைகளும் உயிர்ப்புடன் இருந்த கிராமத்தில், ஊரின் நடவடிக்கைகள் எனக்குள் ஏராளமான கேள்விகளை உருவாக்கின.

கண்மாய்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் எங்கள் ஊரில், அதே கண்மாயில்தான் குளிப்பார்கள். கண்மாயின் ஓர் இடத்தில் ஒரு கல் போடப்பட்டு இருக்கும். அங்கு ஒரு சாதியினர் குளிப்பார்கள். கொஞ்சம் தள்ளி வேறொரு இடத்தில் இன்னொரு கல். அங்கு வேறொரு சாதியினர் குளிக்க வேண்டும். இப்படி, சாதிக்கு ஒரு கல் போட்டுக் குளித்த கண்மாய், சாதியின் கொடூரத்தை எனக்குப் போதித்தது.

இன்னொரு பக்கம், ஊர் எல்லையில் இருந்த காவல் தெய்வத்தை யாரும் திருடிவிடக் கூடாது என்பதற்காக தினமும் கொஞ்சம் பேர் இரவில் காவல் காப்பார்கள். 'மக்களைக் காக்க வேண்டிய காவல் தெய்வத்தையே நாம் காக்க வேண்டியிருக்கிறது என்றால், அப்புறம் என்ன அது காவல் தெய்வம்?' என்று இயல்பாகவே கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விகள் என்னை பெரியாரிடம் கொண்டுசேர்த்தன. ஈழப் பிரச்னை மட்டுமல்ல, தமிழ் மக்களின் நலன் சார்ந்த அரசியலே இங்கு வெற்றிடமாக இருக்கிறது. தமிழக அரசியல் வெற்றிடத்தைக் கற்றவர்கள் நிரப்ப வேண்டும். இல்லை என்றால், கயவர்கள் நிரப்புவர் என்று கூறினார் சீமான்.

No comments: