Mar 13, 2011

ஜப்பானின் 5 அணு உலைகள் வெடிக்கும் அபாயம்!!

டோக்கியோ,மார்ச்.13:ஜப்பானில் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து புகஷிமா அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையிலும் வெப்பமும், அழுத்தமும் அதிகரித்துள்ளதால் அந்நாடு அணு விபத்து பீதியில் ஆழ்ந்துள்ளது.

40 ஆண்டுகள் பழமையான புகஷிமா அணுசக்தி நிலையத்தின் முதல் அணு உலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. பூகம்பத்தால் சேதமடைந்த அணு உலையின் மேல்பகுதி வெடித்துச் சிதறியதால் அப்பிரதேசம் முழுவதும் அணுக்கதிர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று,இரண்டாவது அணு உலையிலும் வெப்பமும், அழுத்தமும் பல ஆயிரம் மடங்கு அதிகரித்து வெடித்து சிதறும் நிலையில் உள்ளது. வெப்பத்தைக் குறைத்து வெடிப்பை தவிர்ப்பதற்கான கடுமையான முயற்சியில் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் போராடி வருகின்றனர்.

மொத்தம் 6 அணு உலைகளைக் கொண்ட புகஷிமா அணுமின் நிலையத்தில் மேலும் 3 அணு உலைகள் வெப்பக்கட்டுப்பாடு கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இத்துடன் 5 அணு உலைகளும் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அணுமின் நிலையம் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 170000 பேர் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அணுசக்தி நிலையத்திலிருந்து கதிர் வீச்சு கசிந்தால் நீண்டகாலமாக துயரத்தை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகும். உயிருள்ளவை யெல்லாம் அழிந்துபோகுமளவுக்கு சக்திக்கொண்ட அணுசக்தி கதிர்வீச்சினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பல ஆண்டுகள் தொடரும்.

No comments: