Feb 19, 2011

எகிப்த் வெற்றி விழா 30 லட்சம்பேர் பங்கேற்ப்பு!! டாக்டர் யூசுஃப் அல்கர்தவியின் உரை!!

கெய்ரோ,பிப்.19:சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் உலகின் பிரபல முஸ்லிம் அறிஞருமான டாக்டர் யூசுஃப் அல்கர்தாவி நேற்று கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் 30 லட்சம்பேர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகையில் பங்கேற்று உரைநிகழ்த்தினார். டாக்டர் கர்தாவி எகிப்து நாட்டைச் சார்ந்த மார்க்க அறிஞராவார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர். கடந்த 1981 ஆம் ஆண்டு எகிப்தை விட்டு வெளியேறிய அவர் கத்தர் நாட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி எகிப்தில் மக்கள் எழுச்சிப் போராட்டம் உருவானது. இப்போராட்டம் துவங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து ஹுஸ்னி முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக குரல் எழுப்பி வந்தார் கர்தாவி.

எகிப்தில் ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) வெற்றித்தினமாக கொண்டாடினர். இதனையொட்டி தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த ஜும்ஆ தொழுகையில் பங்கேற்க 30 ஆண்டுகளுக்கு பிறகு கர்தாவி எகிப்து மண்ணில் காலடி எடுத்துவைத்தார். ஜும்ஆ தொழுகையில் 30 லட்சம் பேர் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கர்தாவி நேற்று ஜும்ஆ குத்பாவில் கூறியதாவது: "அரபுலக ஆட்சியாளர்கள் தங்களது குடிமக்களின் கோரிக்கைகளை கேட்க தயாராகவேண்டும். மக்களுக்கு எதிராக செயல்படுவதல்ல. மாறாக அவர்களுடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையை நடத்த தயாராக வேண்டும்.

அநீதிக்கும், மோசடிக்கும், ஏகாதிபத்தியத்திற்குமெதிரான வெற்றி இது. ஒரே லட்சியத்திற்காக எகிப்திய மக்கள் வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டது முன்மாதிரியாகும். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஐக்கியத்தின் காட்சி தஹ்ரீர் சதுக்கத்தில் அரங்கேறியது. இந்த ஐக்கியமும், ஒத்துழைப்பும் தொடர்ந்து நிலைபெறவேண்டும். 14 நூற்றாண்டுகளாக இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் தத்துவத்தின் மையமாக விளங்கிய எகிப்து தனது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும். காஸ்ஸாவிற்கான ரஃபா எல்லையை ராணுவம் திறந்துவிட வேண்டும். புரட்சி முழுமையாக வெற்றிப்பெறும் வரை அனைவரும் பொறுமையோடு உறுதியாக நிற்கவேண்டும்." இவ்வாறு கர்தாவி உரை நிகழ்த்தினார்.

கர்தாவி முன்னதாக இளைஞர்களை வாழ்த்தியவாறு தனது உரையை துவக்கினார். அவரது உரையை தஹ்ரீர் சதுக்கத்தில் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்ட 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரவாரத்துடனும், தேசிய கொடியை வீசியும் ஆதரித்தனர். கர்தாவியின் உரையை எகிப்திய மக்கள் மிக்க கவனத்தோடு கேட்டனர். எகிப்திய தேசிய தொலைக்காட்சி சேனல் உள்பட ஏராளமான அரபு தொலைக்காட்சிகள் கர்தாவியின் ஜும்ஆ உரை மற்றும் தொழுகையை நேரடியாக ஒளிபரப்பின.

No comments: