Apr 30, 2011

ஆயுத விற்பனையை துவங்கியது 'வால் மார்ட்'!!!

வாஷிங்டன், ஏப். 30-'வால் மார்ட்' சில்லறை வணிக நிறுவனம், ரைபிள்ஸ் உள்ளிட்ட ஆயுதப் பொருட்கள் விற்பனையை மீண்டும் துவக்கியுள்ளது.

'வால் மார்ட்' சில்லறை வணிக நிறுவனத்திற்கு, அமெரிக்கா முழுவதும் 3,600 கிளைகள் உள்ளன. வணிகப் பொருள் விற்பனைக்காக, துவக்கப்பட்ட 'வால் மார்ட்' காலப்போக்கில், ரைபிள்ஸ், கை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றையும் விற்க துவங்கியது.

எனினும், போதிய வரவேற்பு இல்லாததால், கடந்த 2006ல், ஆயுதப் பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஆயுதப் பொருட்கள் விற்பனையை துவங்கியதாக, வால் மார்ட்' அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, 'வால் மார்ட்' செய்தி தொடர்பாளர் லொரன்சோ லோபஸ் கூறியதாவது: மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, மீண்டும் ஆயுதப் பொருட்கள் விற்பனையை, வால் மார்ட்' துவங்குகிறது. முதற்கட்டமாக, அமெரிக்காவில் உள்ள 500 கிளைகளில் மட்டும், ஆயுதப் பொருட்கள் விற்கப்படும்.

கடைகளில் ரைபிள்ஸ், கை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவை கிடைக்கும். அதன்பின், படிப்படியாக, இதர கிளைகளிலும் விற்பனை துவங்கப்படும். ஏற்கனவே, இந்த முயற்சியில் தோல்வியடைந்ததால், இம்முறை உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆயுதப் பொருட்களுக்கான கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் உள்ள வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடி தொழில் நிறைந்த பகுதிகளையும் சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு லொரன்சோ லோபஸ் கூறினார்.

No comments: