Apr 8, 2011

அதிமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும்!! ஜவாஹிருல்லாஹ்!!

தமுமுக தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை.

முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித உள்ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகள் நீக்கப்படும். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்படும். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்படும்.

முஸ்லிம் ஜமாஅத்துகள் வழங்கும் திருமணப் பதிவுச் சான்றிதழை (தஃப்தர்) சட்டப்பூர்வமாக ஏற்கப்படும். ஆகிய வாக்குறுதிகளை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், கூட்டணியின் தலைவருமான செல்வி ஜெ. ஜெயலலிதா, தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அளித்துள்ளார்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களிடமும் அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் இந்தத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளது.

மேற்கண்ட வாக்குறுதிகள் அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. எனவே அக்கோரிக்கைகள் நிறைவேறாது என திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக இயங்கி வரும் பேரா. காதர் மைதீனும் மற்றும் சில வாய்ஜாலக்காரர்களும் பேசி வருகின்றனர்.

இவ்வாறு பேச அவர்களுக்கு அருகதையே இல்லை. 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் இடஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரசும், அதற்கு முழுமுயற்சி எடுப்பதாக திமுகவும் தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டன.

2004ல் பதவியேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நீதிபதி ராஜிந்தர் சச்சார் உயர்நிலைக் குழுவையும், பிறகு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தையும் அமைத்து, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அறிக்கைகளையும் பெற்றது.

இந்திய முஸ்லிம்களின் அவலநிலையை ராஜிந்தர் சச்சார் குழு வெளிப்படுத்தியது. ரங்கநாத் மிஸ்ரா ஆணையம், இந்திய அளவில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு, அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என மிகத்தெளிவாகப் பரிந்துரைத்தது.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மேற்கண்ட பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும்கூட அவை இன்றுவரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் நிறைவேற்றப்பட வில்லை.

இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு திமுக சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறுவிட்டு, முஸ்லிம்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என்பதை ஆணையப் பரிந்துரைகள் மூலம் அறிந்துகொண்டு முஸ்லிம்களை ஏமாற்றுவதும், முதுகில் குத்துவதும், காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்கு கைவந்த கலையாகும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்று குறைபேசும் இவர்கள், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, பிறகு சமுதாயத்தை ஏமாற்றிய மோசடிக்காரர்களுடன் ஏன் கூட்டணியில் இருக்கிறார்கள்.

ராஜிந்தர் சச்சார் அறிக்கை குறித்தும், ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரை குறித்தும் இதே காதர் மைதீன் எம்.பி.யாக இருந்தபோது ஏன் நாடாளுமன்றத்தில் பேசவில்லை. அவற்றை நிறைவேற்றப் போராடவில்லை.

இப்போது எம்.பி.யாக இருக்கும் அப்துல் ரகுமானாலும் ஏன் அவை குறித்துப் பேச முடியவில்லை. காரணம் இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதிகள் இல்லை. மாறாக, திமுகவின் பிரதிநிதிகள். திமுக சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்கள்.

அஇஅதிமுக, முஸ்லிம் சமுதாயத்திற்கு அரசியல் பிரதிநிதித்துவம் தேவை என்பதை முழுமனதாக ஏற்று, திமுக, முஸ்லிம் லீக்கை அடிமைப்படுத்தி உதயசூரியனில் நிற்கவைத்தது போல் அல்லாமல், மனிதநேய மக்கள் கட்சி தனிச் சின்னமான இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிட முழுமையான ஆதரவை அளித்துள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தை வாய்ஜாலங்களால் ஏமாற்றி, நம்பவைத்து முதுகில் குத்தி, அடிமைப் படுத்தும் போக்கையும் இனி முஸ்லிம் சமுதாயம் ஏற்காது. முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவோம் என திமுக கூறுவது பித்தலாட்டம்.

ஏனெனில் ஆட்சியில் இருக்கும்போது அதிகரிக்காமல், தேர்தல் நேரத்தில் கூறுவது ஏமாற்று வேலையன்றி வேறில்லை. முஸ்லிம் ஜமாஅத்களின் உரிமையில் தலையிட்டு, முஸ்லிம் திருமணங்களில் நெருக்கடியை ஏற்படுத்தும், திருமணப் பதிவுச் சட்டத்தைத் திருத்த வேண்டும்.

என 6.3.2010 அன்று சமுதாயப் பிரதிநிதிகள் சட்ட அமைச்சர் துரைமுருகனை சந்தித்து வலியுறுத்தினார்கள். இதில் மாற்றம் செய்யப்படும் என்று வாக்களித்த திமுக அரசு, மாற்றம் செய்யவில்லை. ஏமாற்றம்தான் தந்தது.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தாய்மொழியில் கற்கும் உரிமை பறிக்கப்பட்டது. அதைச் சுட்டிக்காட்டிய பிறகு, தீர்வு காணப்படும்; உருதுமொழியில் கற்க வழிசெய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். அவரது வார்த்தை நீர்மேல் எழுத்தானது.

4.5 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கியதாக திமுக அரசு கூறுகிறது. இதில் 3.5 சதவீதம் அதாவது 15,750 முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதா என வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு வலியுறுத்தினோம். பதிலில்லை ஏனெனில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டிலும் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு சொன்னதைச் செய்யாமல், தொடர்ந்து ஏமாற்றுபவரோடு அணி சேர்ந்து கொண்டு, இன்னும் ஒருபடி மேலே போய் திமுகவிலும் உறுப்பினராகி விட்டவர்கள், முஸ்லிம் சமுதாயத்திற்கான உரிமைகள் பற்றியோ, அதிமுக பற்றியோ பேச அருகதை அற்றவர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

1 comment:

My Verses said...

I totally disagree with Prof.Jawahirullah. He is also like others who often abuse fellow muslim brothers to get the cheap publicity.