Dec 8, 2010

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்பதை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்.


சென்னை, டிச.8- இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அவ்வாறு அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவ்வாறு ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னையில் பல வருடங்களுக்கு முன்னர் டக்ளஸ் தேவானந்தா மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தில் அவர் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், எழும்பூர் நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்நிலையில், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அவ்வாறு ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று, விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

No comments: