Jun 28, 2012

வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!

எந்நேரமும் வேலை வேலை என்று அதிலேயே மூழ்கிப் போகிறவரா நீங்கள்? ஜாக்கிரதை, வேலை சார்ந்த வியாதிகள் தற்போது அதிகரித்து வருகின்றன என்கிறது ஓர் ஆய்வு. சுமார் 2 கோடி இந்தியர்கள் வேலையால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி இருக்கிறார்களாம்.

பணியிட பாதிப்பு என்றால், சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு செய்வோருக்கு ஏற்படும் காயங்கள், கோழிப்பண்ணைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் `பேரட் பீவர்' என்றில்லை. `ஒயிட்காலர் ஜாப்' எனப்படும் அலுவலகப் பணிபுரிபவர்களுக்கும் அனேக பாதிப்புகள் ஏற்படலாம்.
உங்களின் இருக்கை முறைப்படி வடிவமைக்கப்படாததாக இருந்தால், நீங்கள் 6 முதல் 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முதுகுவலி, மணிக்கட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் வரிசை கட்டி வரும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை உணர்வது அரிதே. 1.9 கோடி இந்தியர்கள் பணியிட பாதிப்புக்கு உள்ளாகின்றனர்,
அவர்களில் 1.20 லட்சம் பேர் ஆயுளை இழக்கின்றனர் என்கிறது, `பணியிட வியாதிச் சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின்' புள்ளிவிவரம். இது உலக அளவில் 17 சதவீதம். மரணத்தை ஏற்படுத்துவதில் பணியிடப் பாதிப்புகள் 10-வது பெரிய காரணமாக உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
``இந்தியர்களில் 43 சதவீதம் பேர் பணிபுரிபவர்கள். எனவே அலுவலக பாதிப்புகளை நாம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார், அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் இயக்குநர் பி.கே. நாக். நாள் முழுவதும் உட்கார்ந்து செய்யும் வேலை, புகைப் பழக்கத்துக்கு இணையாக மோசமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அது, `டைப் 2' சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு இட்டுச் செல்லலாம். ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, ஓடியாடி வேலை செய்யும் மற்றவர்களை விட அதிக எடை போடும் வாய்ப்பு இரண்டு மடங்காம். மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பை உடற்பயிற்சி கூட போக்காது என்கிறார்கள்.
மும்பையில் உள்ள புகழ்பெற்ற பிரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் சஞ்சய் போருடே, ``என்னிடம் வரும் நோயாளிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இளம் அலுவலர்கள்'' என்கிறார்.
`இருக்கைப் பணி' புரிபவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும், சோம்பல் முறிப்பது போன்ற எளிய பயிற்சிகள் கூட நன்மை பயக்கும் என்று ஆலோசனை கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

3 comments:

MARI The Great said...

நல்ல பதிவு.!

Seeni said...

nalla thakaval!

நிலாமகள் said...

10-வது பெரிய காரணமாக ...!!

நாள் முழுவதும் உட்கார்ந்து செய்யும் வேலை, புகைப் பழக்கத்துக்கு இணையாக மோசமானது //

:0

மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பை உடற்பயிற்சி கூட போக்காது //

ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இப்ப‌திவு ஒரு எச்ச‌ரிக்கை.