Feb 11, 2011

கோவையில் நடந்த "சின்கரானிக்ஸ்2kb' கண்காட்சி!!!

கோவை, எஸ்.என்.ஆர்., கல்லூரி மின்னணுவியல் துறை சார்பில், "சின்கரானிக்ஸ்2kb' கண்காட்சி, கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கண்காட்சியில், மின்னணுவியல் மாணவர்கள் பங்கேற்று, தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். விபத்து நடந்த வாகனத்தில் இருந்து, பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு தானியங்கி தகவல் அனுப்பும், மொபைல் போன் அரஸ்டர்; இதயத்துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவைக் காட்டும் கருவி; ரேடியோ அலைவரிசை மூலம் ஓட்டுப்போடும் கருவி; வாகனம் ஓட்டும் போது, டிரைவர்கள் தூங்கி விட்டால் அபாய ஒலி எழுப்பும் கருவி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. "மொபைல் போன் அரஸ்டர்' கருவி அனைவரையும் கவர்ந்தது. எஸ்.என்.ஆர்., கல்லூரி இரண்டாம் ஆண்டு பயன்பாட்டு மின்னணுவியல் (அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்) மாணவர் அருண்குமார் இக்கருவியை வடிவமைத்துள்ளார்.

இக்கருவி செயல்படும் முறை குறித்து அருண் குமார் கூறியதாவது: வாகனத்தின் முன்பக்கத்தில் சிறிய அளவிலான சென்சார் கருவி பொருத்தப்படும். இக்கருவி, ஜி.பி.ஆர்.எஸ்., மூலம் மொபைல் போனுடன் இணைக்கப்படுகிறது. விபத்து நடந்தால் அதிர்வு மூலம் உணரும் சென்சார் கருவி, மொபைல் போனுடன் இணைந்து, சில எண்களுக்கு விபத்து நடந்திருப்பது குறித்து தானாகவே தகவல் அனுப்பி விடும். எந்த இடத்தில் விபத்து நடந்துள்ளது என்பதை ஜி.பி.ஆர்.எஸ்., மற்றும் சிக்னல் டவர் மூலம் அறிந்து, அந்த தகவலையும் அனுப்பிவிடும். நிறைய எண்களை இதில் பதிந்து கொள்ள முடியும். இதனால், அவசர சிகிச்சை மையம், நண்பர்கள், உறவினர்களுக்கு எளிதில் தகவல் சென்றடையும். விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை கிடைக்கும். சிறிய அளவிலான இயந்திரம் என்பதால், எளிதில் பொருத்த முடியும். தொலைவு ஒரு பொருட்டே அல்ல. எல்லாப் பகுதிகளிலும் இக்கருவி செயல்படும். இவ்வாறு, அருண்குமார் தெரிவித்தார்.

No comments: