Aug 27, 2011

கிரீன் டீ புற்று நோய்க்கு அருமருந்து!

கிரீன் டீக்கு பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங்தான். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது.

அதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.  அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கீரின் டீயின் வரலாறு. சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். "சா' என்ற சொல்லிலிருந்தே சாயா.

பச்சைத்தேயிலை சாயாவுக்குத் தொடக்கம் சீனாவாக இருந்தாலும், அது எல்லா இடங்களுக்கும் பரவி பச்சைத் தேயிலை உற்பத்தியில் ஒவ்வொரு நாடும் போட்டி போடுகிற நிலைக்குக் கொண்டுபோய்விட்டது.  இதன் வரிசையில் மலை மாவட்டமான நீலகிரியில் பிரதானத் தொழிலான தேயிலைத் தொழிலில் முதலிடத்தில் இருப்பது பசுந்தேயிலை. அதேபோல, தேயிலை வர்த்தகத்தில் முதலிடத்தில் இருப்பது பச்சைத்தேயிலை.

பசுந்தேயிலை என்பது தேயிலைத்தூள் உற்பத்திக்காக தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கப்படும் கொழுந்து. இதைப் பல்வேறு வகைகளில் பதப்படுத்தி தேயிலைத்தூளாகத் தயாரிக்கப்படும். ஆனால், பச்சைத் தேயிலை என்பது தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கும் கொழுந்தை அப்படியே உலர வைத்து பின்னர் பயன்படுத்துவது.  பச்சைத்தேயிலை அதிக அளவில் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பயன் என்ன தெரியுமா?

புற்று நோய்க்கு அருமருந்து. கலிபோர்னியாவிலுள்ள ஜான் வெயின்ஸ் புற்றுநோய் மையத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.சரவணன் மேற்கொண்ட கிரீன் டீ குறித்த ஒரு ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. ""கிரீன் டீயிலுள்ள இஜிசிஜி எனப்படும் (Epi Gallo Catechin Gallate) பொருள் மிகச்சிறந்த மருத்துவ நிவாரணி என்பதால் புற்றுநோயைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு பிரதானமானது.

மார்பகப் புற்று நோய்க்கும், கல்லீரல் புற்றுநோய்க்கும் மிகச்சிறந்த மருந்து பொருளாகவும் கிரீன் டீ பயன்படுகிறது. புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதே இதன் முக்கிய வேலை.  இந்தப் பச்சைத் தேயிலையை சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் உலகளவில் மற்ற நாட்டினரைவிட புற்றுநோய்க்கு ஆளாவது சீனாவிலும் ஜப்பானிலும் மிகவும் குறைவு. 

சீன போர்ப்படை வீரர்கள் யுத்தத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிரீன் டீயைப் பருகிவிட்டுத்தான் போர்க்களத்திற்கே செல்வார்களாம். அந்த அளவிற்கு இது வலிமை மிக்க பொருளாகவும் கருதப்பட்டு வந்தது. கிரீன் டீ பருகுவதால் தோல் விரைவில் சுருக்கமடையாது என்பதோடு, இளமையுடனும், வனப்புடனும் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமென்பதே சீனர்களின் வாதம். அத்துடன் கிரீன் டீயில் இயற்கையாகவே புளோரைடு எனப்படும் பொருள் அமைந்துள்ளது.

பற்பசைகளில் புளோரைடுக்காக கூடுதல் விலையைக் கொடுத்து வாங்கும் நிலையில் இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் இது பற்களுக்கும் பாதுகாப்பானதாகும். உடலில் உணவுப்பொருள் ஜீரணத்திற்கு முக்கியமானதான கிரீன் டீயில் உள்ள டாக்சிஜன்ட் தன்மை, குடலிலுள்ள சிறு துகள்களைக்கூட அகற்றும் வல்லமை கொண்டதாகும்'' என்கிறார் சரவணன். சீனாவிலிருந்து சென்ற புத்தமதத் துறவிகளால் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை பின்னர் இங்கிலாந்திற்குக் கொண்டு சென்று பயிரிடப்பட்டது.

அங்கு பகல் உணவின்போது பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குடிக்கும் டீயை ஹை டீ எனவும், மற்ற நேரங்களில் களைப்பிற்காகவும், புத்துணர்வுக்காகவும் குடிக்கும் டீயை லோ டீ எனவும் அழைக்கிறார்கள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் 1610ம் ஆண்டுகளில் தேநீர் என்பது பணக்காரர்களின் பானமாகவே கருதப்பட்டது. அப்போது 1 பவுண்டு தேயிலை 100 டாலருக்கு விற்கப்பட்டதாக வரலாறே உள்ளது.

5 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

உடல் எடை குறையவும் இந்த கிரீன் டீக்கு பங்கு உண்டு.

Anonymous said...

Nalla pathivu vaalththukkal kathiravan.

Ravathi said...

Ennimel irunthu veettil green tea thaan::::

Ravathi said...

Thank u for sinthikkavum, thank u for kathiravan.

Anonymous said...

அருமையான ஆரோக்கியப் பதிவு .
இது பல ப்ளேவர்களில் கிடைக்கிறது .
பொதுவாக அப்படியே குடித்தால் நலம் .
கசக்கிறது எனக் கருதினால் சர்க்கரை சேர்க்காமல்
தேன் சேர்த்துப் பருகலாம்.