Feb 12, 2011

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை!!!

தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பான 7-வது தேசிய கருத்தரங்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று நடந்தது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஒய்.எஸ்.குரேஷி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் 99 சதவீத அரசயில்வாதிகளை நம்ப முடியவில்லை என்று சொல்கிறார்கள். அரசியலை நம்பி அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். கொலை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவர் களுக்கு 5 வருட தண்டனை கிடைக்கிறது.

ஆனால் தேர்தலில் குற்றங்களில் ஈடுபடுபவர்களை சிறு வழக்குகள் என்று கூறி விட்டு விடுகிறார்கள். கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் 20 வருடம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தேர்தலில் நிற்பது தங்களது அடிப்படை உரிமை என்கிறார்கள். அது எப்படி அடிப்படை உரிமையாகும். தேர்தலில் போட்டியிடுபவர்கள் நன்கொடை யாரிடம் வாங்குகிறார்கள். எவ்வளவு வாங்குகிறார்கள் போன்ற விவரங்களை கணக்கிட வேண்டும்.

அப்போதுதான் அவர்களிடம் ஆதாயம் பெறுபவர்கள் யார் என்று கண்டு பிடிக்க முடியும். இந்தியாவில் தேர்தல் தான் ஊழலில் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது. தேர்தலை பொறுத்தவரை பணம் மிகப்பெரிய சக்தியாக அங்கம் வகிக்கிறது. பாராளுமன்ற தொகுதிக்கு ரூ. 25 லட்சம் வரை செலவு செய்யலாம் என்ற விதி உள்ளது. ஆனால் அதை விட 100 மடங்கு அதிகமாக செலவு செய்கிறார்கள். தேர்தல் கமிஷன் என்ன செய்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். பீகார் தேர்தலில் வேட்பாளர் செலவு வங்கி கணக்கு மூலம் கண்காணிக்கப் பட்டது. வாக்காளர்களுக்கு நள்ளிரவில் பணம் கொடுக்கப்படுகிறது. அதனால் அது வெளியே தெரியவில்லை.

குற்றவாளிகளின் பணம், ஊழல் தேர்தலில் அடிப்படையாக உள்ளது. ஒவ்வொரு கட்சிக்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுக்கிறார்கள். ஒருவர் கொடுப்பதை விட மற்றொருவர் அதிகமாக கொடுக்கிறார்கள். தேர்தலில் மக்களின் வரிப்பணம் பல கோடியில் செலவு செய்யப்படுகிறது. தேர்தலுக்கு பிரசாரம் ஓய்ந்த பிறகு அந்த கடைசி 48 மணி நேரத்தில் வீடு வீடாக சென்று பணம், பொருட்கள், மது பாட்டில்கள் கொடுக்கப்படுவது தடை செய்ய வேண்டும். யாருக்கு ஓட்டு போடுவது என்று சிந்திக்கும் நேரம் அது. அந்த நேரத்தில் இது போன்ற முறைகேடுகள் அதிகமாக நடக்கிறது.

ஓட்டு போட்டு விட்டு வந்தவர்களிடம் கருத்து கேட்டு முடிவுகளை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல தேர்தலின் முந்தைய கருத்துக் கணிப்பிக்கும் தடை செய்ய வேண்டும். தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பே ஊழல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இது போன்ற சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்து தேர்தலை நடத்த வேண்டும்.

தேர்தலில் வெளிப்படையான பண பரிவர்த்தனை இல்லை. அரசியல் கட்சிகள் வரவு-செலவுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். தேர்தலில் பண புழக்கத்தை கட்டுப்படுத்த பீகாரில் நடைமுறைப்படுத்திய திட்டத்தை வருகிற 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பயன்படுத்துவோம். சட்டசபை தொகுதிக்கு ரூ. 10 லட்சம், எம்.பி. தொகுதிக்கு ரூ. 25 லட் சம் செலவு செய்ய வேண்டும் என்பதை சட்டசபை தொகுதிக்கு ரூ. 16 லட்சமாகவும், எம்.பி. தொகுதிக்கு ரூ. 40 லட்சமாகவும் செலவு செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments: