Dec 27, 2010

ஆஸ்திரேலியா சலுகை,..வெளிநாட்டு மாணவர்களுக்கு

ஆஸ்திரேலியாவின் குடியேற்ற மற்றும் குடியுரிமை துறையானது, வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கான புதிய விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இளநிலை, துணைநிலை பட்டம், பட்ட டிப்ளமோ அல்லது முதுநிலை படிக்க விரும்புபவர்களுக்கான நிதி செயல்பாடுகளில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. உயர்கல்விக்கான விசா பெறுவதற்கு குறைந்தளவிலான நிதி ஆதாரத்தை சமர்பித்தாலே போதுமானது. ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட விசா விண்ணப்பங்கள் அல்லது 2011, ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, 2 வருடங்களுக்கான நிதி ஆதாரத்தை காண்பித்தாலே போதுமானது. முன்பு இது 3 வருடங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அத்தகைய நிதி ஆதாரங்கள், பழைய விதிமுறைப்படி 6 மாதம் பழையதாக இருக்கவேண்டிய அவசியமின்றி, 3 மாதம் பழையதாக இருந்தாலே போதுமானது. மேலும் ஒரு மாணவருக்கு அவரின் துணைவரோ, பெற்றோரோ, உடன்பிறந்தவரோ, தாத்தா-பாட்டியோ மற்றும் வேறு நெருங்கிய உறவினரோ மட்டுமே நிதி செலுத்த முடியும் என்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, குறிப்பிட்ட விதிமுறைகளின்படி எந்தவொரு தனிமனிதரும் செலுத்தலாம் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம், வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளை விஞ்சலாம் என்ற நம்பிக்கை ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களும் சில சலுகைகளை இதன்மூலம் அனுபவிப்பார்கள். ஒரு மாணவர் முன்னதாகவே உணவுக்கான கட்டணத்தை செலுத்தியிருந்தால், அந்த தொகையானது, மாணவர் விசா பெறுவதற்கு காண்பிக்கும் வாழ்வாதாரத்திற்கான மொத்த தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: