Nov 29, 2016

நடிகர் திலகம் நரேந்திர மோடி!

கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்", "கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்பேன்" என்று  2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி மக்களுக்கு அருள் வாக்கு கொடுத்தார். 

தேர்தல் பிரச்சாரத்தின் போது "24 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிறது. அதை மீட்டுக் கொண்டுவந்தால் இந்தியா வல்லரசாக மாறிவிடும்" என்று பேசிய பாஜக வினர் ஆட்சிக்கு வந்தவுடன் கருப்புப் பணம் பற்றி கேள்வி எழுப்பினாலே எரிச்சல் அடைந்தனர். நிதியமைச்சர் அருண்ஜெட்லி யோ "கருப்புப் பணத்தை மீட்பது அவ்வளவு சுலபமல்ல என்கிறார்.  இதனால் கருப்புப் பணத்தை மீட்பதில் மோடியின் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வந்த நேரத்தில்தான் பிரதமர் மோடி புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

நவம்பர் 08 இரவு 08 மணியளவில் இந்தியாவின் உயர்மதிப்புப் பணமான ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார். "இந்த இரவு கருப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு தூக்கம் வராது. அடித்தட்டு மக்கள் நிம்மதியாக தூங்குவார்கள்" என்று அந்த அறிவிப்பினூடே தெரிவித்தார். ஆனால் அவர் அறிவிப்பிற்கு மாறாக தூக்கம் தொலைத்தவர்கள் சாதாரண அடித்தட்டு மக்கள்தான் என்பதை வங்கி முன்பும், பணம் எடுக்கும் இயந்திரத்தின் முன்பும் மறுநாள் முதல் காண முடிந்தது.

சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த பணமெல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சைக்கு சென்றவர்கள், திருமணம் வைத்திருந்தவர்கள் என சகலரும் பாதிக்கப்பட்டனர். ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்ற அறிவிப்பில் வேகம் காட்டிய அரசு அதற்கு மாற்று ஏற்பாட்டில் சுணங்கி நின்றது. புதிய நோட்டுகளை தயார் நிலையில் வைக்கவில்லை. அதனால் பொதுமக்கள் பணம் மாற்றுவதற்குக்கூட கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். பணம் மாற்றுவதில் உள்ள சிரமத்தினால் இதுவரை 65க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர்.
இந்த அரசின் முன்யோசனையில்லாத இந்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. "இந்த நடவடிக்கையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாராளமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விதி அவை 56 ன் கீழ் வாக்களிப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்" என பல கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. 
இவர்களுக்கு பதில் சொல்ல பயந்து கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் 54 இன்ச் மார்பு கொண்டவன் என்று மார்தட்டி கொண்ட மோடி ஒளிந்து திரிகிறார். என்னை கொல்ல சதி நடக்கிறது என்று புலம்புகிறார்.  தொலைக்காட்சியில் தோன்றி நான் மக்களுக்காக என் வாழ்க்கையே தியாகம் செய்தவன் என்று அழுகிறார். இவரை இந்திய பிரதமராக ஆக்கியதற்கு பதில் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க அனுப்பி இருந்தால் நாட்டிற்கு நிறைய அவார்டுகளை வாங்கி குவித்திருப்பார் போலும். நடிகர் திலகம் சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு கிடைத்த நடிகர் திலகம் பட்டத்தை இவருக்கு கொடுத்திருப்பார்.   
*நட்புடன்: யாழினி*

No comments: