May 3, 2014

குண்டு வெடிப்பினால் பயனடைவது யார்!?

காலை 11 மணிக்கு பதற்றத்துடன் சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்திற்கு வந்த அகமது உசேன்ராஜா, கவுகாத்தி செல்லும் விமானம் குறித்து விசாரித்து கொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரணைக்காக சென்னை போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்று ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டார் அவரது பெயர் முகமது என்று கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக, ஒவ்வொரு முறை இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போதும், சந்தேகம் என்ற பெயரில் ஒரு அகமதுவையோ அல்லது ஒரு முகமதுவையோ பிடித்து விசாரணை என்ற பெயரில் மூன்று நான்கு மாதங்கள்அடைத்து வைத்திருந்து பின்னர் விடுதலை செய்வது வாடிக்கையாக உள்ளது.

அப்போ, உண்மையான குற்றவாளிகள் யார் ... ???
உண்மையான குற்றவாளிகள், குற்றத்தை அகமது பக்கமும் முகமது பக்கமும் திருப்பி விட்டுவிட்டு வெகு சுலபமாக தப்பித்து விடுகின்றனர்.
குண்டுவெடிப்பினால் எல்லா சமூகத்து மக்களும் உயிரிழப்புகளை சந்திக்கின்றனர், பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர் ஆனால், குறிப்பிட்ட சமூகத்தினர்மீது மட்டும் பழி விழுகிறது.

வெடிகுண்டு சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் அகமதுவும் முகமதுவும் மேளதாளங்களுடன் நன்கு விளம்பரம் செய்யப்பட்டு காவலில் உள்ளே அழைத்து செல்லப்படுகின்றனர் ஆனால், அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று வெளியேவருவதை யாரும் கண்டுகொள்வதில்லை.

சந்தேகத்தின்பேரில் குற்றம் சுமத்தப்படுபவர் காவலில் இருந்த மூன்று நான்கு மாதங்களில் பல சித்திரவதைகளுக்கு உட்படுத்த பட்டதோடு மட்டுமல்லாமல் தீவிரவாதி என்ற பழியையும் சுமந்து ஓசையின்றி வெளியே வருகிறார். அவர் சார்ந்த சமூகமும் அந்த பழியை சுமக்கிறது.

தற்காலத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களும் குண்டுவெடிப்பு, தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரை காரணமாக காட்டியே வெளிவருகின்றன.
தேர்தல் முடிந்து முடிவுகளை எதிர்நோக்கியும் மேலும் பல இடங்களில் தேர்தல் முடியாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில் குண்டு வெடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டு வெடிப்பினால் அதிக அளவில் பயனடைவது யார்?.

முகநூலில் குறிப்பிட்ட சமூகத்தினரை சாடி வரும் பதிவுகளுக்கு அந்த சமூகத்தினர் போட்டி போட்டுக்கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது பலருக்கு அருவருப்பை ஏற்ப்படுத்தலாம். ஈரறிவு கொண்ட மண்புழுவை சீன்டினாலே அது அதன் எதிர்ப்பை வெளிப்படுத்த தன் உடலை அசைத்து காட்டும்போது, ஆறறிவுள்ள மனிதன் பொறுமையாக இருக்கவேண்டும் அல்லது அடங்கி போகவேண்டும் என்று நினைப்பது நியாயமல்ல.

குண்டுவைத்தது...இஸ்லாமியனாக இருந்தால் அது தேசப்பிரச்சனை வேறு ஒருவனாக இருந்தால், அது சாதாரண நிகழ்வு என உள்வாங்கிக்கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஒதுக்கிவிட்டு, மற்ற சமூகத்தினர் ஒருபோதும் நிம்மதியாக வாழ்ந்துவிடமுடியாது.

தமிழகத்தை பொறுத்தவரை இசுலாமியர்களும் இந்துக்களும் தாயா பிள்ளையாக, மாமன் மச்சானாக பழகிவருகின்றனர் அதன் காரணமாகவே, மதத்தை மையமாக வைத்து இயங்கும் தேசிய கட்சிகள் எவ்வளவோ உத்திகளை கையாண்டும்.

காவிகளுடன் கை கோர்த்து வரும் எந்த அரசியல் கட்சியும் தமிழகத்தில் வேரூன்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமுதா @.

No comments: