Jul 21, 2011

ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் : உ.பி., கிராமத்தில் அதிசயம்!!!

ஜூலை 21லக்னோ : ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர், இரட்டைக் குழந்தைகளாக பிறந்திருந்தாலே, அவர்களைப் பார்த்து எல்லோரும் வியப்படைவர். ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளில் 108க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் அருகே உள்ள உம்ரி கிராமத்தில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்கு மனிதர்கள் மட்டும் இரட்டையர்களாகப் பிறக்கவில்லை. கிராமத்தில் உள்ள விலங்கினங்களும் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. இதற்கான காரணத்தை கண்டறிய, விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களும் முயற்சி மேற்கொண்டும் பலனில்லை.

ஐதராபாத், டில்லி, கோல்கட்டா, சென்னை மற்றும் மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் பலரும், சமீப காலங்களில் உம்ரி கிராமத்திற்கு சென்று, சோதனை மேற்கொண்டுள்ளனர். எனினும், உரிய காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை.

உம்ரி கிராமத்தை சேர்ந்த இரட்டையர்களில் ஒருவரான குடு என்ற சிறுவன் கூறுகையில், "" தற்போது கிராமத்தில் உள்ள இரட்டையர்களில், 16 ஜோடி இரட்டையர்கள் மட்டுமே ஒரே மாதிரியாக இருப்பர். அவர்களில் ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பது கடினம்,'' என்றான். குடுவின் தாத்தா கூறுகையில், ""80 ஆண்டுகளுக்கு முன், கிராமம் முழுவதும் இரட்டைக் குழந்தைகள் அதிகளவு நிறைந்திருந்தன,'' என்றார்.
இவ்வகையில், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் தங்கள் ஊரின் பெயரைப் பதிவு செய்வது என, உம்ரி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

No comments: