Jun 18, 2011

நான் வாலண்டினா! தமிழீழ மண்ணின் மலர்!

நான் வாலண்டினா..... இந்த மண்ணின் பூ!
இங்கு பூத்து என் தாய்மண்ணுக்கே உரமானவள்.
எம் தாய்மண்ணில் உலவும் ஆயிரமாயிரம்..
கதைகளைப்போன்றவள் தான் நானும். என்குரல் உங்கள் செவிகளில் கேட்குமென்ற நம்பிக்கையில் பேசுகிறேன்! நீங்கள் வசிக்கும் உலகின் மற்றோர்பரப்பில் பிறந்தவர்கள் நாங்கள் சிற்றினமாய் போனதனால் வாழும் உரிமை பறிக்கப்பட்டவர்கள். வந்தேறிகளால் சிறிதுசிறிதாய் அழிக்கப்பட்டவர்கள். இன்று நீங்கள் காணொளியில் கண்டவற்றை எங்கள்.. கண்ணெதிரில் கண்டு கருகியவர்கள்.

நான் வாலண்டினா ... அது ஒரு வசந்த காலம்!
நானும் என் தோழியரும் பள்ளிக்குப்போவோம்.
எங்கள் ஊர் நுழைவில் சோதனைச்சாவடி ஒன்று உண்டு.
அதைத் தாண்டிய பத்தடியில் எங்கள் பள்ளி.
செக்போஸ்டில் இருக்கும் சுகன் அண்ணா எப்போதும்..
சொல்லுவார் பத்திரமாப் போய்வாருங்கோ என்று.

அவன் எப்போதும் எங்கட பள்ளிக்கூட வாசலில் வந்து நிற்பான். ஆமிக்காரன். எனக்கு அவனைப்பாக்க, அவன்ட உடுப்பைப்பாக்க.. வெறுப்பாயிருக்கும்.  இதுபோல உடுப்பணிஞ்ச ஒருத்தன்தான்.. என் சகோதரனைக் கூட்டிக்கொண்டு போனான்.  பிறகு.. என் சகோதரன் அருவிக்காடு புதரில் பிணமாய்க் கிடந்தவன்.

நான் வாலண்டினா .... எனது கடைசி நாள்!
அதுதான் நான் உயிரோடிருந்த இறுதி நாள். அன்று இரவே எல்லாரும் எங்கேயோ கிளம்பினாங்கள்,  அம்மா என்னையும் எழுப்பி வெரசா வா, ஆமிக்காரன் ஊருக்குள் நுழைஞ்சு விட்டானாம்,  எல்லாரும்.. செஞ்சோலைக்கி போறாங்கள் என்று சொன்னாள். நாங்களும் எல்லாரோடவும் நடக்க ஆரம்பித்தோம்.

நான் வாலண்டினா .... கருகப்போகும் மலர்!

இன்று செக் போஸ்டில் வழமையா நிக்கும் சுகன் அண்ணாவைக் காணவில்லை. அந்த ஆமிக்காரன் நின்றிந்தான்.  என்னைப் பாத்தவன் கையசைச்சு கூப்பிட்டான். அம்மா என்னை இழுத்துக்கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.  அவனும் விடாமல் வந்து என் கையப் பிடிச்சு இழுத்துக்கொண்டு போனான், அம்மா கத்திக்கொண்டே ஓடிவந்தாள்.

எல்லாரும் தெரிஞ்ச முகங்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. நான்
என்ன செய்யோணும் என்று எனக்குப் புரிந்து போனது. பிடித்திருந்த
அவன் கையிலுருந்து என்னை விடுவித்துக்கொள்ள பலங்கொண்ட
மட்டும் போராடினேன்.

நான் வாலண்டினா .... வீரத்தமிழச்சி!

அதற்குள் இன்னொரு ஆமிக்காரனும் சேந்துக் கொண்டான். இனி என்னால் போராட முடியாது.  இந்த புலைநாய்களின் பசிக்கு நான் இரையாவக்கூடாது என்று முடிவெடுத்தேன். ஆமிக்காரனுக்கு அவன்ட உடுப்பின்மேல் கர்வம் உண்டு என்று எனக்குத் தெரியும்.  சிங்கள நாயே விடுடா எண்டு கத்தியபடியே காலைத்தூக்கி அவன்ட நெஞ்சில் எட்டி உதைத்தேன்.

ஒருத்தன் என்கையை பின்னாடி வளைத்துப் பிடித்துக்கொள்ள, இன்னொருத்தன் துப்பாக்கியின் பின்புறத்தால்..  என் மூஞ்சியிலும் நெஞ்சிலும் இடிச்சான். வாயெங்கும் இரத்தம் நிரம்பி என்னைப் பேசவிடாமல் செய்தது. அவன்ட கோபத்தை மேலும் கிளற
வேணுமெண்டு முடிவெடுத்தேன்.

நான் வாலண்டினா ...மானத்தோடு மடியப்போகிறேன்!

எங்கட தோட்டங்களிலும், தொழிலிலும் கைகட்டி நின்ன சிங்கள நாயே, எங்களை ஆளனுமெண்டு நினைச்சியோடா...  என்று அவன் யூனிபோர்மில் பொறித்திருந்த சிங்க இலச்சினையின் மீது காறிஉமிழ்ந்தேன். என் குறிக்கோள் நிறைவேறி விட்டது. இதோ துப்பாக்கியை என்னை நோக்கி நீட்டுகிறான் அதோ வந்து கொண்டிருக்கிறது எனக்கு விடுதலையளிக்கப்போகும் துப்பாக்கிக் குண்டு!!

மானத்தைக் காப்பாற்றிக்கொண்ட தமிழச்சி என்ற பெருமையோடு காற்றில் கரைகிறேன்...
-யாழினி-

No comments: