Jan 6, 2011

தெலுங்கானா பிரச்சனையும், ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையும்.


டெல்லி: தெலுங்கானா விவகாரத்தில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது.ஆனால், அந்த அறிக்கையில் எந்த உறுதியான தீர்வும் கூறப்படவில்லை.

பரிந்துரை 1: ஆந்திராவை பிரிக்காமல் ஐக்கிய ஆந்திராவாக தொடர்ந்து நீடிக்க வைக்கலாம். அதில் தெலுங்கானாவைச் சேர்ந்தவரை முதல்வர் அல்லது துணை முதல்வராக்கலாம்.

பரிந்துரை 2: ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கலாம். இதில் ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திர மாநிலங்கள் இருக்கலாம். ஹைதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக்கிவிடலாம். இரு தனி மாநிலங்களுக்கும் தங்களுக்கென தனி தலைநகர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

பரிந்துரை 3: ஆந்திராவின் ராயலசீமா பகுதி மற்றும் தெலுங்கானாவை இணைத்து ராயல-தெலுங்கானாவை உருவாக்கலாம். கடலோர ஆந்திராவை தனி மாநிலமாக்கலாம்.
ஹைதராபாத்தை ராயல-தெலுங்கானா பகுதியோடு இணைக்கலாம்.

பரிந்துரை 4: மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரித்துவிட்டு, ஹைதராபாத்தை மேலும் விரிவாக்கலாம். ஹைதராபாத்துடன் ஆந்திரா, தெலுங்கானாவின் மேலும் பல பகுதிகளை இணைத்து அதை தனி யூனியன் பிரதேசமாக்கலாம்.

பரிந்துரை 5: மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாகப் பிரித்து அதில் ஹைதராபாத்தை தெலுங்கானாவின் தலைநகராக்கலாம். ஆந்திராவுக்கு தனி தலைநகரை உருவாக்கலாம்.

பரிந்துரை 6: ஆந்திராவை பிரிக்காமல் தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்கு தனி கவுன்சிலை உருவாக்கலாம்.

இவ்வாறு 6 பரிந்துரைகளை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி முன் வைத்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கூறுகையில், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை கால தாமதப்படுத்தத்தான் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. அந்த அறிக்கை விவரத்தை வெளியிடுவதை கூட இழுத்தடிக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்த வரையில் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி கவலை இல்லை. இன்னும் 20 நாளில் தெலுங்கானா தராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களை ஸ்தம்பிக்க செய்வோம்.காங்கிரஸ் தலைவர் சோனியா மனது வைத்தால் தனி மாநிலம் கிடைத்து விடும். அவர் தெலுங்கானா தர ஒப்புக்கொண்டால் அவரது பாதத்திற்கு பாலாபிஷேகம் செய்யத் தயார் என்றார்.

No comments: