Jan 4, 2011

மும்பையில் அழுகி போகும் 200 டன் வெங்காயம்! அதிர்ச்சி ரிபோர்ட்.

மும்பை,ஜன:நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்தபடி உள்ள நிலையில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 200 டன் வெங்காயம், மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் அலட்சியப் போக்கால் மும்பையில் அழுகிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் வெங்காய விலை கடுமையாக உள்ளது. வெங்காயம் மட்டுமல்லாமல் தக்காளி உள்ளிட்டவற்றின் விலையும் கடுமையாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதையடுத்து பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தானிலிருந்து கப்பல் மூலம் 200 டன் வெங்காயம் கொண்டு வரப்பட்டது. இந்த வெங்காயம் தற்போது மும்பை துறைமுகத்தில் வீணாக அழுகி வருகிறது.

இந்த வெங்காயத்தை வெளி மார்க்கெட்டுகளில் விநியோகிக்க மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் இதை இரு அரசுகளும் இன்னும் செய்யாமல் உள்ளன. இதன் விளைவாக வெங்காயம் வீணாகி அழுகிக் கொண்டிருக்கிறது.மொத்தம் எட்டு கன்டெய்னர்களில் இந்த வெங்காயம் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கொடுக்கப்பட்டால் மட்டுமே வெங்காயத்தைக் காப்பாற்ற முடியும்.இல்லாவிட்டால் முழுமையாக அழுகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments: