Jul 17, 2010

"இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்"- முலாயம்சிங் யாதவ்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களின் (கல்யாண் சிங்) ஆதரவை கோரியதற்காக இஸ்லாமியர்களிடம் தாம் மன்னிப்புக் கோருவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று விடுத்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக சில தவறான சக்திகளின் ஆதரவை பெற்றேன்.இது மதச்சார்பற்ற சக்திகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதோடு,இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளையும் புண்படுத்திவிட்டது. எனது இந்த தவறை நான் ஏற்றுக்கொண்டு,எனது அந்த செயலுக்காக இஸ்லாமிய சகோதரர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களின் ஆதரவை எதிர்காலத்தில் ஒருபோதும் நாடமாட்டேன் என்று ஏற்கனவே நான் பகிரங்கமாக அறிவித்திருந்தேன்.நான் செய்த இந்த தவறை இனிமேல் செய்யமாட்டேன் என்று எனது இஸ்லாமிய சகோதரர்களுக்கு உறுதியளிப்பதோடு, இஸ்லாமிய சமூகத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் முலாயம்.

No comments: