Jul 31, 2011

2020ல் நாடு வல்லரசாக கனவு மட்டும் போதாது!!!

AUGUST 1,கோவை : ‘‘2020ம் ஆண்டு இந்திய வல்லரசு நாடாக அறிவிக்க வேண்டும் என்கிற கனவு மட்டும் இருந்தால் போதாது. அதற்கு நாம் எவ்வுளவு தகுதி பெற்றிருக்கிறோம் என்பது சிந்தித்து பார்க்க வேண்டும்.

அனைத்து துறைகளிலும் தற்போது இருப்பதை விட பல மடங்கு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்,‘‘ என கல்லூரி விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.கோவை ஜி.ஆர்.டி கலை அறிவியல் கல்லூரியின் 150வது நேருக்கு நேர் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:

இந்தியாவில் தனித்துவமாக விளங்கிய மனிதர்கள் பலர் உள்ளனர். மகாத்மா காந்தி, சி.வி.ராமன் போன்றவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உயிரிழந்தவர்கள். இன்று அவர்கள் நம்முடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் பங்கு என்ன என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். மாணவர்களாகிய நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

அது உங்கள் உரிமை. ஆனால் அதே துறையில் உள்ள சகமனிதர்களை காட்டிலும் உங்களின் திறமைகளை எப்படி தனித்துக்காட்டுகிறீர்கள் என்பது முக்கியம். நான் இதுவரை நாடு முழுவதும் 12 கோடி இளைஞர்களை சந்தித்திருக்கிறேன். எல்லாரிடத்திலும் நாட்டுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற வெறி இருக்கிறது. பொதுவாக நாட்டில் சாதனை பெற்று நம் தனித்துவம் பெற்று விளங்க மூன்று காரியங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

உங்களின் இலக்கு என்ன என்பதை முதலில் தெளிவுப்படுத்தி கொண்டு, அதை நோக்கிய பயணம் தேவையானது. அதில் கடுமையான உழைப்பு தேவை. எந்த ஒரு சூழலில் பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தியை வளர்த்து கொள்ள வேண்டும். 2020ம் ஆண்டு இந்திய வல்லரசு நாடாக அறிவிக்க வேண்டும் என்கிற கனவு மட்டும் இருந்தால் போதாது.

அதற்கு நாம் எவ்வளவு தகுதி பெற்றிருக்கிறோம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நம்முடைய நாட்டின் வல்லரசுக்கு இன்னும் 9 ஆண்டுகள் முழுமையாக இருக்கிறது. அதற்குள் விவசாயம், குறையில்லா மின்சாரம், கல்வி, சமூக பாதுகாப்பு, உணவு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்போது இருப்பதை விட பல மடங்கு வளர்ச்சி யடைந்திருக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

No comments: